பக்கம்:தில்லைப் பெருங்கோயில் வரலாறு.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

21

3. மூர்த்தியும் தீர்த்தமும்

எல்லாம் வல்ல இறைவன் ஆன்மாக்கள் தன்னையுணர்ந்து வழிபட்டு உய்திபெறுதல் வேண்டும் பெருங்கருணைத் திறத்தால் அன்பர்கள் தம் உள்ளத்து எண்ணிய பலவேறு திருவுருவங்களாகிய மூர்த்தியாகவும், அம்மூர்த்தி கோயில் கொண்டெழுந்தருளிய திருத்தலங்களாகவும், அங்கு வழிபடவரும் அன்பர்களின் அகத்தையும் புறத்தையும் தூய்மை செய்யும் தீர்த்தங்களாகவும் திகழ்கின்றான் என்பது நம் முன்னோர் தம் வாழ்வியலிற் கண்டுணர்ந்த பேருண்மையாகும். சிவநெறிச் செல்வர்களாற் கோயில் எனச் சிறப்பித்தும் போற்றப்பெறும் பெரும் பற்றப்புலியூராகிய தில்லைப்பதி மூர்த்தி, தலம், தீர்த்தம் என்னும் முத்திறத்தாலும் சிறந்து விளங்குகின்றது. இவ்வுண்மையினை,

"தீர்த்த மென்பது சிவகங் கையே
ஏத்த குந்தலம் எழிற்புலி யூரே
மூர்த்தி யம்பலக் கூத்தன துருவே"
(சிதம்பரச்செய்யுட்
கோவை)

எனவரும் பாடலிற் குமரகுருபர அடிகளார் எடுத்துரைத்துப் போற்றியுள்ளார்.

தில்லைப் பெருங் கோயிலில் பழமையான மூர்த்தி அருவுருவத் திருமேனியாகிய சிவலிங்க உருவில் எழுந்தருளிய திரு மூலட்டானேச்சுரர். பாதாளத்திலிருந்து தோன்றிய மலையின் கொழுந்தாக முளைத்தெழுந்த மூர்த்தி இச்சிவலிங்கத் திருவுருவமாகும். மத்தியந்தன முனிவருடைய மைந்தராகிய வியாக்கிரபாதர் தில்லை வனத்திற்கு வந்து சிவலிங்கப் பெருமானைத் தமது பெரும் பற்றாகக் கொண்டு வழிபாடு செய்தார். அது பற்றியே இத்தலம் பெரும்பற்றப்புலியூரெனவும், இங்கு எழுந்தருளிய சிவலிங்கத் திருமேனியின் சந்நிதி திருமூலட்டானம் எனவும். வழங்கப் பெறுவன ஆயின. கண்களால் காண இயலாத இறைவனது அருவத்திருமேனிக்கும் கண்களாற் காணக்கூடிய உருவத்திருமேனிக்கும் மூலகாரணமாய்த் திகழ்வது அருவுருவமாகிய இச் சிவலிங்கத் திருமேனியே. இந்நுட்பம்,

"காணாத அருவினுக்கும் உருவினுக்கும் காரணமாய்
நீணாகம் அணிந்தார்க்கு நிகழ் குறியாம் சிவலிங்கம்"
(பெரிய சாக்கிய:)