உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 8.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

124

தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 8


வெவ்வேறு நாடுகளிலிருந்த வெவ்வேறு ஊர்களேயாம், என்பது ஐயமின்றித் துணியப் படும்.

ஆகவே, இடவையும் இடைமருதும் வெவ்வேறு ஊர்கள் என்பது அப்பரடிகளது க்ஷேத்திரக்கோவைத் திருத்தாண்டகத்தாலும் தஞ்சைப் பெரிய கோயிலிலும் திருவிடை மருதூர்க் கோயிலிலும் வரையப் பெற்றுள்ள கல்வெட்டுக்களாலும் நன்கு வெளியாதல் காண்க.

திருவிடைமருதூர் என்பது கும்பகோணத்திற்குக் கிழக்கே ஐந்து மைல் தூரத்தில் காவிரியாற்றின் தென்கரையில் தென்னிந்திய இருப்புப் பாதையில் ஒரு புகைவண்டி நிலையமாக இந்நாளில் சிறந்து விளங்குவதைப் பலரும் அறிவர்.

இடவை என்னும் ஊர் இந்நாளில் காணப்படவில்லை. எனவே, அஃது அழிந்து போயிருத்தல் வேண்டும்; அன்றேல் வேறு பெயருடன் இக்காலத்திலிருத்தல் வேண்டும். எனினும் மண்ணிநாட்டிலுள்ள திருமங்கலக்குடி, திருக்குடித்திட்டை, வேம்பற்றூர், திரைலோக்கி, திருப் பனந்தாள் ஆகிய ஊர்கட்கு அண்மையில் தான் இடவையும் இருந்திருத்தல் வேண்டும். அன்றியும், திருப்பனந் தாளுக்கருகில் மண்ணியாற்றிலிருந்து பிரிந்து சென்ற கால்வாய் ஒன்று இடவை வாய்க்கால் என்னும் பெயரு டையதாயிருந்தது என்பது அவ்வூர்க் கல்வெட்டால் அறியக்கிடக்கின்றது. ஆகவே இடவை என்பது கும்பகோணம் தாலுக்காவில் திருப்பனந்தாளுக்குத் தென் கிழக்கில் இருந்திருத்தல் வேண்டும் என்பது திண்ணம்.