உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 8.pdf/186

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆய்வுக் கட்டுரைகள்

161


கருவூர்த்தேவர் என்பவர் திருவிசைப் பாவினைப் பாடியுள்ளார். இவன் காலமுதற் கொண்டு முதற்குலோத்துங்கன் காலம்வரை மேலைச் சாளுக்கியரோடு சோழர்கள் ஓயாது போர்புரிய வேண்டியிருந்தமையால் புதிதாக நூல்கள் தோன்று வதற்கியை பில்லாமற் போயிற்று. வீரரா சேந்திர சோழன் காலத்து அவ்வரசன் வேண்டுகோட் கொண்டு பொன்பத்திக் காவலன் புத்த மித்திரன் என்ற ஆசிரியர் 'வீரசோழியம்' என்ற இலக்கணநூலை இயற்றினார். தமிழில் ஐந்திலக்கணம் அமைந்த நூலாக முதன் முதற்றோன்றியது இந்நூலேயாம். அன்றியும் இவன் காலத்துத் திருவாரூரில் வாழ்ந்த புலவரொருவரால் வீரசோழ அணுக்க விசயம் என்ற இலக்கிய நூலுமியற்றப் பெற்றது. பின்னர் வந்த முதற் குலோத்துங்க சோழன் தமிழ், தெலுங்கு, வடமொழி ஆகிய மும்மொழியிலும் வல்லவன். இவன் தன் அம்மானாகிய வீரராசேந்திர சோழனது உதவியைப் பெற்றான். இவன் காலத்துப் புலவராய சயங் கொண்டார் இவனது கலிங்கத்து வெற்றியைக் கலிங்கத்துப் பரணியாற் பலபடப் பாராட்டி யுள்ளார். இவர் சோழரது பெருந் திறலையும் பிற உயர்பண்புகளையும் அந்நூலின் இராச பாரம்பரியத்திற் கூறியுள்ளார். கம்பருக்குப்பின் கவிச்சக்கரவர்த்தியென்ற பட்டத்தைப் பெற்றவர் இவரே. இவர் பாடிய பரணியை ஒட்டக்கூத்தர், குலோத்துங்கன் பிள்ளைத் தமிழில் பாடற்கரும் பரணி தேடற்கருங்கவி எனப் பாராட்டியதோடு இவரைக் கவிச் சக்கரவர்த்தி யென்றும் புகழ்ந்து போற்றுகின்றார். விக்கிரம சோழன் ஆட்சியில் கூத்தர் இளம் புலவராக இருந்தார். இவர் அவனது ஆறாவதாட்சியாண்டில் ‘விக்கிரம சோழனுலா’வைப் பாடியிருத்தல் வேண்டும். இவனால் பூந்தோட்டத்திற் கடுத்த கூத்தனூர் என்பது கூத்தருக்குக் கொடுக்கப் பெற்றது. இவர் காலிங்கராயன் அரும்பைக் கூத்தனைப் பற்றி “அரும்பைத் தொள்ளாயிரம்” என ஒன்று பாடியிருக்கிறார். அது கிடைத்திலது. காலிங்கராயனாகிய இவன் சயங்கொண்டார் காலத்திலிருந்து விக்கிரமனது ஆறாவதாட்சியாண்டு வரையிலும் அரசியல் வினையியற்றிப்பின்னர் ஓய்வெடுத்துக் கொண்டவன். இவன் இருவராலும் பாடப்பெற்றுள்ளான். ஆதலால் சயங் கொண்டார் காலத்தில் கூத்தருமிருந்திருப்பர் எனக் கருதலாம்.