உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 8.pdf/220

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

195




34. ஒட்டக்கூத்தர் (12ஆம் நூற்றாண்டு)

கவிஞர் பெருமானாகிய ஒட்டக்கூத்தருடைய இயற்பெயர் கூத்தர் என்பது. இது நடராசப் பெருமானுடைய பெயர். இப்புலவர் பிறந்தது மலரி என்னும் ஊர். இவ்வூர் திருச்சிராப்பள்ளிக்கு அண்மையில் இக்காலத்தில் திருவரம்பூர் என்று வழங்கிவரும் திரு எறும்பியூரே என்பது அங்குள்ள கோயிற் கல்வெட்டால் உறுதி எய்துகின்றது. இவர் செங்குந்த மரபினர் என்பது மட்டும் தெரிகிறது.

இவர் தமிழ் இலக்கண இலக்கியங்களில் சிறந்த புலமை பெற்றிருந்ததோடு வடமொழி நூல்களையும் நன்கு பயின்றிருந்தாரென்று தெரிகிறது. அன்றியும் இவர் செய்யுள் இயற்றும் ஆற்றல் மிக்கவர் என்பதும், சிவபக்தி உடையவர் என்பதும், கலை மகளிடத்தும் திருஞானசம்பந்த மூர்த்தியிடத்தும் அன்பு வாய்ந்தவர் என்பதும் இவர் இயற்றியுள்ள நூல்களால் விளங்கும்.

இவர் முதற்குலோத்துங்க சோழனுடைய புதல்வன் விக்கிரம சோழனுக்கு அவைக்களப் புலவராகவும், அவன் மகன் இரண்டாங் குலோத்துங்க சோழனுக்கும் அவன் புதல்வன் இரண்டாம் இராசராச சோழனுக்கும் தமிழாசிரியராகவும் அவைக்களப்புலவராகவும் விளங்கிப் பெருவாழ்வு பெற்று நெடுங்காலம் இருந்தவர் என்று தெரிகிறது. அவர்களுள் விக்கிரம சோழன் (ஆ.கா 1118-1133) மீது உலா ஒன்றும், கலிங்கப்பரணி என்ற நூல் ஒன்றும் இவர் பாடியுள்ளார். அவற்றுள், கலிங்கப் பரணி இந்நாளில் கிடைக்காமையின் இறந்ததுபோலும். விக்கிரம சோழனுலாவிலுள்ள ஒரு கண்ணியை ஒட்டி ஒரு செய்யுள் பாடும்படி வேந்தன் கூற, அவ்வாறே விரைந்து பாடியமைபற்றி இப்புலவர் ஒட்டக்கூத்தர் என்று வழங்கப் பெற்றனர் எனக் கூறுவர். இப்பெயருக்கு வேறு காரணம் கூறுவாரும் உண்டு. விக்கிரம சோழன் இவருக்கு யானை, காளம்