உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 8.pdf/223

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

198

தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 8


கொள்கையாகும்; அதற்குத்தக்க ஆதாரங்கள் இல்லை என்பது அறியத்தக்கது. அவர்களுள் புகழேந்திப் புலவர் இவருக்குச் சற்றேறக் குறைய நூறாண்டுகளுக்குப் பிற்பட்டவர். எனவே, இவருக்கும் அப்புலவருக்கும் வாதப் போர் நிகழந்தது என்றும், இவர் தூண்டுதலால் அவர் சோழமன்னனால் சிறையிலிடப்பட்டார் என்றும் கூறப்படும் செய்திகள் எல்லாம் வெறுங் கற்பனைக் கதைகளேயன்றி உண்மையான சரித்திர நிகழ்ச்சிகள் ஆகமாட்டா என்பது திண்ணம். இவர் புலவர் பெருமக்களிடத்தில் பேரன்பும் பெருமதிப்பும் வைத்திருந்தவர் என்பதை இவருடைய நூல்களால் நன்குணரலாம்.

இவரை ஆதரித்தவர்கள் மேலே குறிப்பிடப் பெற்ற சோழ மன்னர் மூவரும் அவர்களுடைய அமைச்சர்களும் படைத் தலைவர்களுமான அரும்பாக்கிழான் மணவிற் கூத்தன் காலிங்க ராயன், திருச்சிற்றம்பல முடையான் பெருமானம்பி என்பவர்களும் காவிரிப்பூம்பட்டினத்து வீரர்கள் புதுவைக் காங்கேயன், திரிபுவனைச் சோமன் ஆகியோரும் ஆவர்.

இவர் இயற்றியனவாக இப்போது அறியப்படும் நூல்கள், விக்கிரம சோழனுலா, கலிங்கப்பரணி, அரும்பைத் தொள்ளாயிரம், குலோத்துங்க சோழன் பிள்ளைத் தமிழ், குலோத்துங்க சோழனுலா, இராசராச சோழனுலா, தக்கயாகப் பரணி, காங்கேயன் நாலாயிரக் கோவை என்பனவாம். அன்றியும், இவர் சில சமயங்களில் பாடியனவாகச் சொல்லப்படும் சில செய்யுட்கள் தமிழ் நாவலர் சரிதை முதலியவற்றில் உள்ளன.

விக்கிர சோழனுலா முதற்குலோத்துங்க சோழனுடைய புதல்வனும் அவனுக்குப் பிறகு சோழ இராச்சியத்தில் சக்கரவர்த்தியாக வீற்றிருந்து அரசாண்டவனுமாகிய விக்கிரம சோழன் மீது இயற்றிய உலா. இந்நூல் அவ்வேந்தன் வீதியில் பவனி வருங்கால் நகரிலுள்ள எழுபருவப் பொதுமகளிரும் அவனைக் கண்டு காமுற்றதாகக் கலிவெண்பாவில் பாடப் பெற்றது. அவன் முன்னோரான பண்டைச் சோழர்களுடைய வரலாறுகளும் வீரச்செயல்களும் கூறப்பட்டிருத்தலால் இது வரலாற்று ஆராய்ச்சிக்குப் பயன்படும் அரிய நூலாகும். இது 684