உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 8.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

48

தி.வை.சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள்-8


புரிந்தவனும் அரிகேசரி பராங்குசன் மாறவர்மன் என்று செப்பேடுகளில் குறிக்கப்பெற்றவனுமாகிய முதல் இராச சிம்ம பாண்டியன் ஒரு மழவ அரசனது புதல்வியை மணந்துகொண்ட செய்தி வேள்விக்குடிச் செப்பேடுகளால் அறியக்கிடக்கின்றது1.

அன்றியும், திருவிசைப்பாவிலுள்ள பதிகங்களுள் ஒன்றைத் திருவாய் மலர்ந்தருளிய முதற்கண்டராதித்த சோழதேவர் மழவர் குடியிற் றோன்றிய ஒரு பெண்மணியைத் திருமணஞ் செய்து கொண்டா ரென்பதுகல்வெட்டுக்களால் வெளியா கின்றது2. இன்னோர்க்குப் பிறந்த அருமைப் புதல்வனே உத்தமச் சோழ னென்று புகழப் பெறும் மதுராந்தகச் சோழனென்பான்; இம்மன்னன் இராசராசசோழனது ஆட்சியின் முற்பகுதியில் அவனோடு சேர்ந்து சோழநாட்டை ஆட்சிபுரிந்தவன். இவற்றால், ஏழு, எட்டு, பத்து, பதினோராம் நூற்றாண்டுகளிலும் மழவர் குடியினர் சிறந்துவாழ்ந்தமை நன்கு பெறப்படும். இக்காலத்தே இவர்கள் சோழர்கட்கு அடங்கிய குறுநில மன்னராகவும், அன்னோர்க்குப் படைத்தலைவராகவும் மந்திரா லோசனை சபையின் அங்கத்தினராகவும் இருந்துள்ளனர்4

ஆகவே, நெடுமுடிவேந்தராகிய சேரபாண்டிய சோழரது நிலைகுலைய, பிறர் இத்தமிழகத்தைக் கைப்பற்றிய நாட்களில்தான் மழவரும் தங்கள் பண்டைப்பெருமையிற் சுருங்கித் தாழ்ந்த நிலையையெய்தத் தலைப்பட்டனர். இனி, இம்மழவரது வழித்தோன்றல்களாகத் தற்காலத்தே யுள்ளவர் யாவரென்பதை ஆராய்வோம்.

(தொடரும்)

குறிப்பு: இதன் தொடர்ச்சி கிடைக்கவில்லை.