உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 8.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆய்வுக் கட்டுரைகள்

53


நாட்டிற் புகுந்தால் பல ஆலயங்கள் அழிக்கப்பட்டுவிடுமே: அந்தணர் துன்புறுவரே: ஆதலால் அச்சிங்களப்படை தோற்றோடுமாறு தாங்கள் எவையேனும் உபாயங்கள் செய்தருள வேண்டும்' என்று கூறினன். இதனைக்கேட்ட அப்பெரியார்' 'அன்னோர் இராமேச் சுரம் கோயில் வாயிலை இடித்துச் சிவபெருமானுக்கு நித்திய பூசை நடை பெறாதவாறு இடையூறு புரிந்தனர் என்று கேள்வியுற்றேன்: எனவே அவர்கள் சிவா பராதம் செய்தவர் ஆவர். ஆகவே, அவர்கள் போரில் தோல்வியெய்தி ஓடுமாறு தக்கவழி தேடுவேன்' என்றுரைத்து இருபத்தெட்டு நாட்கள் இரவும்பகலும் தவம்புரிந்தனர் அப்போது திருச்சிற்றம்பல முடையான் பிள்ளைப் பல்லவராயனிடமிருந்து 'இலங்காபுரித் தண்டநாயகனும் சகத்விசயதண்டநாயகனும் தோல்வி யுற்று இலங்கைக்கு ஓடிப்போயினர்' என்று எதிரிலி சோழச் சம்பு வராயனுக்கு ஒரு திருமுகம் வந்தது. இதனைக் கண்ட இச் சம்புவராயன் பெரிதும் மகிழ்ந்து ஆரப்பாக்கத்திலிருந்த சுவாமிகளிடம் கொண்டு போய்க்காட்டவே. அவரும் உவகையுற்றனர். பின்னர் இவ்வேந்தன் ஆரப்பாக்கம் என்னும் கிராமத்தை அப்பெரியாருக்கு அளித்தனன். இச்செய்திகளை ஆரப்பாக்கத்திலுள்ள கல்வெட்டுக்களில் விளக்கமாய்க் காணலாம். (Ins. 20 of 1899) இவ்வேந்தன் மூன்றாம் இராஜராஜ சோழன் காலத்தும் அவனது சிற்றரசர்களுள் ஒருவனாயிருந்தனன். விரிஞ்சிபுரத்திற் கருகிலுள்ளதும் பொய்கை என்று தற்காலத்தில் அழைக்கப்படுவதுமாகிய இராஜேந்திர சோழநல்லூர் சித்திரமேழிமலை மண்டல விண்ணகரான அருளாளப் பெருமாளுக்குக் குமாரமங்கலம், புத்தூர், அத்தியூர் ஆகிய கிராமங்களைக் கி.பி.1238,1239, 1243 ஆம் ஆண்டுகளில் மலை மண்டலத்து வணிகன் இராமகேரளச் செட்டியிடம் இம்மன்னன் பொன் பெற்றுக்கொண்டு தேவதானமாக விட்டான் என்று பொய்கையிலுள்ள கல்வெட்டுக்கள் கூறுகின்றன. (S.I.I Vo1. Nos. 59,61,62 and 64)

அத்திமல்லன் சம்புகுலப் பெருமாளான இராஜகம்பீரச் சம்புவராயன் என்பானும் மூன்றாம் இராஜராஜசோழனது ஆட்சியின் 20-ம் ஆண்டாகிய கி.பி.1236-ல் ஆட்சிபுரிந்து