துங்கபத்திரை
1
வண்ண முந்தானையின் மென்மையான தழுவலில் ஒண்டிக் கிடக்கும் வாலைக் குமரியின் வசீகர உடலைப் போல், துங்கபத்திரா நதியின் அரவணைப்பில் விஜய நகரம் மணக்கோலம் பெற்று விளங்கியது. தலைநகரை அமைத்த திருச் செல்வர்கள் எதிரிகளின் போர்த் திட்டங்களைத் துல்லியமாகக் கணக்கிட்டுத்தான் கட்டி யிருக்க வேண்டும். மையத்தில் திலகமாக விளங்கிய அரண்மனையைச் சுற்றி ஏழு கற்கோட்டைகள் கம்பீரமாக வளர்ந்து நின்றன. ஒரு கோட்டை மதிலுக்கும் இன்னொரு கோட்டை மதிலுக்கும் இடையில் ஏழு கல் தூரம் இருந்தது. விளைநிலங்கள், வீரர்களின் இல்லங்கள் முதலியன முதல் மூன்று கோட்டை மதில்களுக்கிடையில் அமைந்திருந்தன. மிகுதியுள்ள மதில் சுவர்களுக்கிடையில் விலை உயர்ந்த ஆடை ஆபரணக் கடைகள் அமைக்கப்பெற்றிருந்தன.
செல்வத்திற்கும் செழிப்பிற்கும், அமைதிக்கும் அரசியல் நெறிக்கும் பெரும் புதையலாக விளங்கிய விஜயநகரப் பேரரசிற்குக் கிருஷ்ணதேவராயர் மகுட பதியாக பொறுப்பேற்றுக் கொண்ட காலம் நடந்து கொண்டிருந்தது. அரசர்க்கு அரசன் ராயர் எழுதிய