பக்கம்:தும்பைப்பூ-நாவல்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

8

வருந்துவாள்; ஆற்றாமை கொள்ளுவாள். நாம் இதைச் சகஜமாகப் பெரும்பாலான குடும்பங்களில் பார்க்கலாம்.

மாசிலாமணி முதலியார் ஒரு விசித்திரமான பாத்திரம். நடுநடுவே தோன்றிக் கதையைச் சுவாரஸ்யமாக நடத்திச் செல்லுபவரும் இவர் தான்; இதை முடித்து வைப்பவரும் இவரே.

இந்நாவலை விரிவாக்க வேண்டுமானால் சிவகுமாரன், விசுவநாதன், கோகிலா, கணேசன் ஆகிய பாத்திரங்கள் உதவுவார்கள். சந்தர்ப்பம் வந்தால் அவர்களைப் பயன்படுத்திக் கொள்வோம். வேலைக்காரி முத்தம்மா, வக்கீல் குமாஸ்தா இரண்டொரு கணங்களில் தோன்றி மறையும் மிகச் சிறிய பாத்திரங்கள். ஆதலால் இவர்களைப் பற்றி ஒன்றும் சொல்ல வேண்டியதில்லை. பொதுவாகப் பாத்திரங்களின் குணப் பண்பும் செயல்களும் சரியாகத் தீட்டப்பட்டிருக்கின்றனவா என்று பார்த்தால் மட்டும் போதும்.

இதற்குமேல் இந்நாவலில் வரும் கதாபாத்திரங்களைப் பற்றி அறிமுகப்படுத்த வேண்டியதில்லை. இனி வாசகர்களே அவர்களை அறிமுகப்படுத்திக் கொண்டு அவர்களோடு அளவளாவி மகிழும்படியாக விட்டு விடுகிறேன்.

“தமிழ்த் தென்ற”லில் பதினைந்து ஆண்டுகளுக்கு முன் வெளிவந்த இந்நாவல் எப்போதோ புத்தக உருவில் வந்திருக்க வேண்டும். கடந்த சில ஆண்டுகளாக என்னை அலைக்கழித்து வந்த வாழ்க்கைச் சோதனைகள் என் இந்த இலக்கியப் படைப்பையும் பற்றிக்கொண்டு மூலையில் கிடத்தி வைத்திருந்தது என்றால் மிகையாகாது.

சென்ற ஆண்டு வெளியிட்ட “தரங்கினி” நாவலின் முதற் பதிப்பு 15 மாதங்களுக்குள் விற்பனையாகிவிட உதவி புரிந்த வாசகர்கள், இந்தத் “தும்பைப் பூ” நாவலையும் வரவேற்றுத் தமிழகம் முழுவதும் உலவ விடுவார்கள் என்பது திண்ணம்.

என் இலக்கிய முயற்சிக்குப் பேராதரவு காட்டிவரும் அனைவருக்கும் என் பணிவார்ந்த நன்றி உரியதாக. கதிவோதயம்.

“ஜீவோதயம்”,
சென்னை-24
நாரண-துரைக்கண்ணன்
6—10—’65