தென்பாண்டிச் சிங்கம் 255 குடும்பத் வீட்டுக்கு முற்றிலும் உரிமையுடைய தலைவனாக மளமளவென்று மாடிப் படிகளில் ஏறிச் சென்றான். அவனது நடையழகைக் கண் கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்த சுந்தராம்பாள், வேலைக்காரியை அழைத்துத் தெருக்கதவைத் தாழ் போடச் சொல்லிவிட்டு, அவளே அடுக்களைப் பக்கம் சென்று அவசர அவசரமாகப் பாலை எடுத்துக் கிண்ணத்தில் ஊற்றிக்கொண்டு, கூடத்தில் இருந்த பழத்தட்டையும் ஒரு கையில் தூக்கிக் கொண்டு மாடிக்குக் கிளம்பினாள். படிகளில் கால் ஊன்றும்போதெல்லாம் நடனக்கலை காட்டும் அவளது அசைவு, அன்றைக்கு ஏனோ நாணிக் கோணி நெளிந்தது! "கல்யாணிக்குத் திருமணம் ஆகிறவரையில் என்று அவன் விதித்த நிபந்தனைகளுக்கான கெடு முடிந்த பிறகு இன்றுதானே வந்திருக்கிறார்! அவளுக்குத் திருமணம் முடித்துவிட்டல்லவா வந்திருக்கிறார். ‘அதனால்...அதனால்... இன்றிரவு... இன்றிரவு..." அதற்குமேல் வார்த்தைகளை உச்சரிக்க முடியாமல் அவளது இதய அதரங்கள் தடுமாறின! அதற்கு அடையாளமாக அவளது கால்கள் ஒன்றோடொன்று பின்னிக் கொண்டன! "என்னடி இப்படியொரு சந்தோஷம்!'" என்று யாரோ அவளைக் கேலி செய்வது போலிருந்தது. சிரித்துக் கொண்டாள். தனக்குள்ளாகவே மின்னிடும் பொன் பூக்களையொத்த கன்னியின் இதழ்கள் துடித்தன. ஒரு வழியாக மாடியறைக்கு வந்து சேர்ந்தாள். பழத் தட்டையும் பால் கிண்ணத்தையும் வாளுக்குவேலி உட்கார்ந்திருந்த இருக்கைக்கு எதிரே வைத்தாள்.
பக்கம்:தென்பாண்டிச் சிங்கம்.pdf/274
Appearance