தென்மொழி
73
(18-ஆம் பக்கத் தொடர்ச்சி),
பலகணி, சாளரம், காலதர் என்ற மூன்று சொற்கள் இருந்தன. இப்போது'சன்னல்' என்ற போர்த்துகீசியச் சொல் வழங்குகிறது. ஆனால் நாம் இந்தச் 'சன்னலை'ப் போக்கிவிட வேண்டும். 'சன்னல்' நமதன்று. இந்த ஒன்றுக்கு இடங்கொடுத்தால் இன்னொன்றுக்கும் இடங்கொடுக்க வேண்டியதுதான். அயற்சொல் என்ரால் அயற்சொல் தான். எந்தச் சொல் யார் வழங்கினாலும் சரி. சேத்திரமும் தொலைய வேண்டும். ஆலயமும் தொலைய வேண்டும். எல்லாம் தொலைய வேண்டும். சேத்திரம் என்றால் சேத்திரக் கணிதம் வந்துவிடுமே ஆகையினாலே, அயற்சொற்களெல்லாம் எதற்கு, தென் சொற்கள், தமிழ்ச் சொற்கள் இருக்கும் போது? தமிழ்ப் பற்றில்லாதவன் என்ன வேண்டுமானாலும் சொல்வான். ஒருவனுக்குத் தாயின் மேலே பற்றிருக்கிறது. அவன் என்ன செய்வான்! தாய் நோய்வாய்ப் பட்டிருந்தால், எவ்வளவு பணம் வேண்டுமானாலும் செலவு செய்து 'நான் உங்களை நலப்படுத்தத்தான் போகிறேன்' என்று சொல்லிக் கொண்டு தானிருப்பான். பற்றில்லாதவன் 'பிணத்தைத் தூக்கியெறியுங்கள், ஏன் இவ்வளவு பணம் செலவழிக்கிறீர்கள்' என்பான். அதுபோலப் பலர் சொல்லிக் கொண்டேயிருக்கிறார்கள். ஆகையினாலே சொற்களை நாம் தமிழ்ப் படுத்த வேண்டும். இப்போது நான் சொன்னேன். தமிழிலே சொற்கள் நிறைய இருக்கின்றன. வடமொழியிலே சில சொற்கள் இருக்கின்றன. மலையாளத்திலே இருக்கிறதெல்லாம் தமிழ்ச் சொற்கள் தாம். சமற்கிருதமல்லாத மலையாளச் சொற்களெல்லாம் பழைய சேர நாட்டுத் தமிழ்ச் சொற்கள் என்பதை மறந்துவிடக் கூடாது. ஆகையினால் அங்கு இருக்கின்றன தமிழ்ச் சொற்கள்; இன்னும் அதற்குமேலே வடநாட்டிலும் சில சொற்கள் இருக்கத்தான் செய்கின்றன. இன்றைக்கும் நீர் என்ற சொல் வங்காளத்தில் வழங்கிக் கொண்டிருக்கிறது. வடநாடு முழுவதும் திராவிடர்கள் இருந்த நாடு ஒரு காலத்திலே! இப்பொழுதுதான் அவர்கள் சிதறிக்கிடக்கிறார்கள் வடநாட்டிலே. உங்கு, இங்கு என்ற சொல் தில்லையிலே வழங்குகிறது. மற்ற இடங்களிலே இதர், உதர் என்கிறார்கள். இந்த இடத்திலே இங்கு, உங்கு என்கிறார்கள். ஆகவே இந்தச் சொற்களெல்லாம் பழைய காலத்திலே அவர்கள் திரவிடராக இருந்தார்கள் என்பதைத் தெளிவுபடுத்துகின்றன. இதற்கு மொழிநூல் சான்று, "திராவிடரின் ஒரு சாரார்தான் வடமேற்கில் போய் ஆரியராக மாறிவிட்டனர். அந்த ஆரியருள் ஒரு சாரார்தான் திரும்ப வேத ஆரியராக வருகிறார்கள்." இது இராமச்சந்திர தீட்சிதருடைய நூலிலே தெளிவாக இருக்கின்றது. அதற்கு முன்னாலே பி.தி. சீனிவாச ஐயங்கார் எழுதிய வரலாற்று நூல்களையெல்லாம் நன்றாகப் பாருங்கள். நானும் முப்பதாண்டுகளாகச் செய்து வரும் ஆராய்ச்சிகளின் முடிவுகளை எல்லாம் ஓர் ஆங்கில