பக்கம்:தெய்வ அரசு கண்ட இளவரசன்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

71

இன்பநிலை கண்ட புத்தபிரான்

ஆறு ஆண்டுகள் பட்டினி கிடந்தும் தவம் புரிந்தும் அவன் எதிர்பார்த்த உண்மை புலப்படவில்லை. பட்டினி கிடப்பது சரியான வழியல்ல என்ற எண்ணம் தலை தூக்கியது. எனவே அவன் பட்டினி கிடப்பதை நிறுத்தி மீண்டும் வழக்கம் போல் உணவுண்ணத் தொடங்கினான்.

அந்த ஆறு ஆண்டுகளும் சித்தார்த்தனுடன் நான்கு சாதுக்கள் சேர்ந்து திரிந்தார்கள். அவனுடைய மன உறுதியைக் கண்டு அவர்கள் அவனைத் தங்கள் குருவாக எண்ணிக் கொண்டார்கள். தவமியற்றி முடிவில் அவன் பெரு ஞானியாகி விடுவான் என்று அவர்கள் எதிர்பார்த்தார்கள். ஆனால் ஆறே ஆண்டுகளில் அவன் பட்டினியிருப்பதைக் கை விட்டவுடன், உறுதியில்லாத கோழை என்று அவர்கள் எண்ணலானார்கள். எனவே அச் சாதுக்கள் சித்தார்த்தனைப் பிரிந்து சென்று விட்டார்கள். அவர்கள் சென்றது பற்றி சித்தார்த்தன் கவலைப் படவில்லை. எப்படியேனும் தான் தேடும் உண்மையை அறிய வேண்டும் என்று அவன் தன் முயற்சியில் ஈடுபட்டிருந்தான். உண்மையை அறிவதற்காக அவன் எவ்வளவு கடுமையான பயிற்சியையும் மேற்கொள்ளத் தயங்கவில்லை.