பக்கம்:தேன் சிட்டு.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

50

தேன் சிட்டு



ஹிரோஷிமாவில் விழுந்த முதல் அணுகுண்டு ஒரே கணத்தில் எண் பதினாயிரம் மக்களின் உயிரைக் குடித்துவிட்டது. இன்று அணுகுண்டின் அழிப்பு வலிமை இன்னும் பல நூறு மடங்கு ஓங்கியிருக்கிறது. அணுகுண்டைவிட ஆயிரம் மடங்கு அழிவுச் சக்தி கொண்ட ஹைடிரஜன் குண்டு தோன்றிவிட்டது. இந்த நிலைமையிலே போர் தொடங்கினால் உலகமே ஒரு சில நாட்களில் அழிந்துவிடும்; மானிட சாதியும் முடிந்து போகும். ஒரு நூறு அணுகுண்டுகளும் ஹைடிரஜன் குண்டுகளும் இந்த அழிவைத் திட்டமாகச் செய்து முடித்துவிடும். பூதத்தைப் படைத்த ஒருவன் அதன் கையாலேயே மாய்ந்தது போல மானிட சாதியின் முடிவும் ஆகிவிடும்.

இதைத் தெளிவாக உணர்ந்த சிந்தனையாளர்கள் பலர் உலகத்திற்கு எச்சரிக்கை விடுத்திருக்கிறார்கள். அணுப்படை வழியைப் பின்பற்றினால் மனித வருக்கமே வேரற்று மாண்டு போகும் என்று அவர்கள் எடுத்துச் சொல்லியிருக்கிறார்கள்.

இந்தியப் பண்பாட்டின் அவதாரமாக வந்த காந்தியடிகள் ஹிம்சையை அறவே களையவேண்டும் என்று வற்புறுத்தினர். அன்பினாலும் அஹிம்சை யாலும் நாம் சாதிக்க விரும்புவனவற்றை யெல்லாம் வெற்றிகரமாகச் சாதிப்பதோடு உலகிலே இன்பமும் அமைதியும் ஒங்கச் செய்யலாம் என்பதை அவர் நமது நாட்டுச் சுதந்திரப் போரிலே மெய்ப்பித்துக் காட்டினார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேன்_சிட்டு.pdf/51&oldid=1148846" இலிருந்து மீள்விக்கப்பட்டது