________________
260 தேவநேயம் அவியுணவும்... இனி, பண்பட்ட மக்கள் இம்மை வாழ்க்கைக்கு மட்டுமன்றி மறுமை வாழ்க்கைக்கும் அறிவுபெற வேண்டியிருத்தலின், அதன் பொருட்டும் உடம்பின் நீள் நன்னிலை இன்றியமையாத தாகும். உடம்பார் அழியின் உயிரார் அழிவர் திடம்பட மெய்ஞ்ஞானஞ் சேரவு மாட்டார் உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே உடம்பை வளர்த்தேன் உயிர்வளர்த் தேனே. 1724) உடம்பினை முன்னம் இழுக்கென் றிருந்தேன் உடம்பினுக் குள்ளே உறுபொருள் கண்டேன் உடம்புளே உத்தமன் கோயில் கொண் டானென்று உடம்பினை யானிருந் தோம்புகின் றேனே. 1725) என்பவை திருமூலர் திருமந்திரங்கள். எனவே, மாந்தன் இருமை வாழ்விற்கும் இன்றியமையாதது உடம்பு என்பது பெறப்பட்டது. இத்தகைய உடம்பை உருவாக்கு வதும் இறுதிவரை நிலைப்படுத்துவதும் உணவே. உணவை விளைப்பது உழவுத்தொழில், அத்தொழிலை மக்கள் அனைவரும் மேற்கொள்ளினும், இரு நிலைமையால் உணவுத் தட்டு ஏற்படும். அவற்றுள் ஒன்று மழையின்மை; இன்னொன்று மக்கட் பெருக்கம். மழையின்மை நீடிக்காது; உலகம் ஒருங்கே அழியும் ஊழியிறுதி வரை, பார் முழுதும் பரவவுஞ் செய்யாது. ஆதலால், பஞ்சகாலத்தில் வளநாட்டினின்று வறட்சி நாட்டிற்கு வேண்டிய உணவை வருவித்துக் கொள்ளலாம். ஆயின் மக்கட் பெருக்கத்தால் ஏற்படும் உணவுத்தட்டு நிலைத்ததும் நீக்க முடியாததுமாகும். மழை ஏராளமாகப் பெய்யினும் உணவுப்பொருள் விளைவது நிலமே யாதலாலும், மக்கட் பெருக்கத்திற்கேற்ப நிலமும் விரிவுறாமை யாலும், நிலவரம்பீடும் பகிர்ந்துண்டலும், குடும்ப மட்டுப்பாடும் அரசியலேற்பாடாக அமைகின்றன. இவ்வகை அரசியலே கூட்டுடைமை (Socialism) என்பது, கூட்டுடைமை என்னும் ஆட்சிமுறை இக்காலத்ததேயானாலும், அதன் உயிர்நாடிக் கூறான பகிர்ந்துண்டலை, ஏறத்தாழ ஈராயிரம் ஆண்டுகட்கு முன்பே, தெய்வப் புலமைத் திருவள்ளுவர். பாத்தூண் மரீஇ யவனைப் பசியென்னும் தீப்பிணி தீண்ட வரிது. (227) பகுத்துண்டு பல்லுயி ரோம்புதல் நூலோர் தொகுத்தவற்று ளெல்லாந் தலை (322 தம்மி லிருந்து தமதுபாத் துண்டற்றால் அம்மா அரிவை முயக்கு 1107) என்னும் குறள்மணிகளால் நெறியிட்டுக் கூறியுள்ளார்.