43. சிவபிரான் உறையும் இடங்கள்
43
43. சிவபிரான் உறையும் இடங்கள் [103]
இறைவர் தம்மைக் காதலினால் நினைப்பவர்தம் அகத்திருப்பார், ஆகத்திருப்பார், உச்சியில் இருப்பார், உடலுள் இருப்பார், சென்னியில் இருப்பார், காவில் இருப்பார், நெஞ்சிலிருப்பார், மனத்திருப்பார், வாயில் இருப்பார்; அன்பு பூண்டு அறுபகையுஞ் செற்று ஐம்புலன்களை அடக்கிய ஞானிகளின் இதய தாமரையில் இருப்பர்; இண்டை மாலை கட்டித் திருநாமங்களை எப்பொழுதும் ஏத்தும் திருநீற்றுத் தொண்டர் வாயினிலிருப்பர். தோத்திரஞ் செய்யும் வாயிடை யிருப்பர். அன்பர்தம் சிந்தையிலும், நாவிலும், சென்னியிலும் இருப்பர். அறநெறியைக் கைப்பற்றித் தமது அருளுக்குப் பாத்திரமானவர் திறத்து இருப்பர், இன்னிசை பாடுவார்பால் இருப்பர். பாடல் பாடும் இடத்திருப்பார். தமிழின் இனிமையைப் பேசி இன்னிசை முழக்குவார் தம் இடத்தைவிட்டு அகலார், தம்மை விரும்பி வழிபடுவார்தம் ஆவியைவிட்டு நீங்கார். ஆவியில் நின்றே அருளுவர். தமது கழலைத் தொழும் பெரியோர் சிந்தையுணின்றும் நீங்கார். புறச்சமயிகளின் சொற்களைப் பாராட்டாதவருடைய உணர்வினுள் நிற்பார். உருகும் அன்பர் உள்ளத்து ஒண்சுடர் அவர்; அழுதெழும் அன்பர் தம் சிந்தையினர்; மதித்து நினைப்பவர் தம் உண்ணின்று மகிழுபவர்; தம்மைப் போற்றும் தொண்டர் உள்ளமெல்லாங் தெரிந்து விளையாடுங் கள்வர்; போற்றுவார் தம் சிந்தையே கோயிலாகக் கொண்டு திகழ்பவர்; தெளிந்த சிந்தையில் தேனுமாய் அமுதுமாய் நிற்பவர்; தம்மைப் போற்றிப் பாடுவோர்தம் வாயிலும் மனத்திலும் நிற்பவர், பொய்யை நீக்கி மெய்யரான புநிதர்தம் சிந்தையர், யோகியர் உணர்வில் எழுகின்ற பொருள், வாழ்த்துவார் மனத்துளார், தவத்தினர் உளத்தவர், ஏத்தும் தொண்டர் கழகத்தினர், பாடிப் பரவுவார்தம் உளத்தவர்; பத்தர் சித்தம் பற்று விடாதவர்; பரவிப் பணியுந் தொண்டர்தம் சித்தத்தவர்; மலரும் புனலுங்