பக்கம்:தேவிக்குளம்-பீர்மேடு.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

முன்னுரை

—★—

'ஜனசக்தி'யில் (1955 டிசம்பர் 11, 18, 25, 1956 ஜனவரி 1-ந் தேதிய இதழ்களில்) வெளிவந்த நான்கு கட்டுரைகளின் தொகுப்பே இச்சிறு நூல். இந்தக் கட்டுரைகள், ராஜ்யச் சீரமைப்புக் குழுவின் சிபார்சுகளை 1955 நவம்பர் இறுதியில் சென்னைச் சட்ட சபை விவாதித்த பொழுது, தேவிகுளம் - பீர்மேடு பற்றி கம்யூனிஸ்டுகள் கடைப்பிடித்த நிலையின்மீது பல்வேறு கட்சிக்காரர்களும் எதிரொலித்த எதிரொலிகளுக்குப் பதில் கூறும் முறையில் தீட்டப்பட்டவை.

அன்றையச் சூழ்நிலை வேறு, இன்றையச் சூழ்நிலை வேறு. அன்று கமிஷன் சமர்ப்பித்த 'ரிப்போர்ட்'டின் மீது சட்ட சபைகளில் விவாதம் நடந்த சூழ்நிலை. இன்று, கமிஷன் சிபார்சு மீது மத்ய அரசாங்கம் தனது திட்டவட்டமான முடிவைத் தெரிவித்துவிட்ட சூழ்நிலை.

இந்தக் கட்டுரைகளில் ராஜ்யங்களைச் சீரமைக்க மொழியைப் பிரதான அடிப்படையாகக் கொள்ள வேண்டும் என்கிறோம். எல்லையை ஜனநாயக ரீதியில் நிர்ணயிக்க தொடர்ச்சியான பிரதேசத்தையும் கிராமத்தையும் அடிப்படையாகக் கொள்ள வேண்டும் என்கிறோம். இந்தக் கட்டுரைகளில், இந்த ஜனநாயகக் கோட்பாடுகளைத் தெளிவாகவும் விளக்கமாகவும் எடுத்துக்காட்டி யிருக்கிறோம்.

இந்தக் கட்டுரைகளை எழுதிய பிறகு நிகழ்ந்துள்ள வளர்ச்சியைக் கணக்கிலெடுத்த பிறகும், மத்ய சர்க்காரின் தீர்ப்பு வந்த பிறகு இந்திய யூனியன் முழுவதிலும் ஏற்பட்ட, ஏற்பட்டு வருகிற பிரதிபலிப்புகளை நிதானமாக மதிப்பிட்ட பிறகும், நாம் எடுத்துக் காட்டிய ஜனநாயக முறையில் மொழிவழியாக ராஜ்யங்களைச் சீரமைப்பது என்ற வழி தான் ஒரே ஒரு சரியான வழி என்பது மென்மேலும் உறுதிப்படுகிறது.

அன்று, சட்ட சபை விவாதத்திலும், நாங்கள் கொடுத்த திருத்தத்திலும் பொதுவான ஜனநாயகக் கோட்பாட்டின் அடிப்படையில்