பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-எழுத்ததிகாரம்.pdf/225

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புள்ளி மயங்கியல் 21S

லுள்ள ‘அன்’ கெடுதலும் வருமொழி முதலிலுள்ள தகர வொற்றுக் கெடுதலும் என முற்கூறிய செய்கைகளுடனே நிலை மொழிப் பெயரில் ‘அன்'கெட நின்ற தகரவொற்றும் வருமொழி முதலில் தகர வொற்றுக்கெட நின்ற அகர வுயிரும் ஒருசேரக் கெடும் என்பது,

       ஆதனும் பூதனுங் கூறிய இயல்பொடு 
       பெயரொற் றகரந் துவரக் கெடுமே.      (தொல்.348)

என்ற சூத்திரத்தால் உணர்த்தப்பட்டது.

     (உ-ம் ஆதன் + தந்தை = ஆந்தை
            பூதன் + தந்தை - பூந்தை எனவரும். 

மேற்கூறிய இயற்பெயர், சிறப்புப் பண்பினை அடை மொழியாகப் பெற்று வருங்கால் முற்கூறிய இருவகைச் செய்கை யும் பெறாது இயல்பாய் முடிவனவாம். இங்ஙனம் இயல் பாதலை,

       சிறப்பொடு வருவழி இயற்கை யாகும்.       (தொல்.349) 

என்பதனாற் குறித்தார் ஆசிரியர்.

(உ-ம்) பெருஞ்சாத்தன்+தந்தை = பெருஞ்சாத்தன்றந்தை

        பெருங்தொற்றன்+தந்தை = பெருங்கொற்றன்றந்தை

எனவரும்.

    மேற்கூறிய இயற்பெயர்களின் முன், இன்னாற்கு மகன் இன்னான் என மக்கள் முறைப்பெயர் வந்து கூடுமிடத்து, நிலை மொழியாகிய இயற்பெயரீற்றில் உள்ள அன் தான் ஏறிய மெய்யை யொழித்துக் கெடும்வழி ‘அம் சாரியை வந்து நிற்றலும் உரியதாகும். இச்சாரியைப் பேற்றினை,
     அப்பெயர் மெய்யொழித் தன்கெடு வழியும் 
     நிற்றலும் உரித்தே அம்மென் சாரியை 
     மக்கள் முறைதொகூஉ மருங்கி னான.    (தொல்.350)

என்ற சூத்திரத்தால் ஆசிரியர் குறித்துள்ளார்.

(உ.ம்) கொற்றன்+கொற்றன் = கொற்றங்கொற்றன்

        சாத்தன்+கொற்றன் = சாத்தங்கொற்றன் 

என நிலைமொழியீற்று ‘அன்’ கெட்டு ‘அம் சாரியை பெற்றன. கொற்றங்கொற்றன்-கொற்றனுக்கு மகனாகிய கொற்றன் எனப் பொருள்படும்.