பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-எழுத்ததிகாரம்.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பிறப்பியல்

     எல்லா வெழுத்துஞ் சொல்லுங் காலைப் 
     பிறப்பி னாக்கம் வேறுவே றியல
     திறப்படத் தெரியுங் காட்சி யான. (தொல், 83) 
   இஃது எழுத்துக்களது பொதுப்பிறப்பு உணர்த்துகின்றது. இ-ள்) எழுத்துக்களெல்லாம் முறைப்பட ஆராய்ந்து சொல்லுங் காலத்துக் கொப்பூழடியாக மேலே கிளர்கின்ற உதானன் என்னும் காற்றுத்தோன்றித் தலை, மிடறு, நெஞ்சு என்னும் மூன்றிடங்களிலும் நிலைபெற்று அம்மூன்றுடன் பல், உதடு, நா, மூக்கு, அண்ணம் என்பவை கூட எட்டாகிய முறைமையையுடைய இடங்களில் ஒருறுப்போடு ஒருறுப்புப் பொருந்தி அமைதி பெற வேறு வேறு இயல்பினவாய்ப் புலப்பட்டு வழங்குதலுடையனவாம். அறிவான் ஆராயுமிடத்து அவற்றின் இயல்பு வகைபெற விளங்கும் எறு.
   இதழ்-உதடு. அண்ணம்-மேல்வாய். இதழ்போறலான் இதழெனப்பட்டதென்றும், எல்லாவெழுத்தும் என்னும் எழுவாய்க்குப் பிறப்பினாக்கம் வேறுவேறியல’ என்பதனை ஒரு சொல் நீர்மைப்படுத்திப் பயனிலையாக்குக என்றும் கூறுவர் இளம்பூரணர்.
   மூச்சினை வெளிவிடுங்கால் நுரையீரல் இரண்டிலிருந்தும் கிளம்பிய காற்று மிடற்றின் வழியாக மூக்கினை அடைந்து வெளியே செல்லுதலும் வாய் வழியாக வெளியே செல்லுதலு மாகிய இயல்பினை உடையதென்றும், அவ்வாறு தோன்றுங் காற்று ஒலி நரம்புகள், அண்ணம், நா. முதலிய ஒலிக்கருவி களோடுங் கூடிச் செய்கை செய்யப்படின் எழுத்தொலிகாளாக மாறுமென்றுங் கூறுவர் உடல் நூலார். உந்தியிலிருந்து எழுந்த காற்றே தலை, மிடறு, நெஞ்சு என்னும் இடங்களில் நின்று பல், உதடு, நா, மூக்கு, அண்ணம் ஆகிய இவ்வுறுப்புக்களின் தொழிலால் வேறு வேறு எழுத்துக்களாக மாறும் எனத் தொல் காப்பியனார் கூறுகின்றார். தொல்காப்பியனார் கூற்று இக்கால உடல் நூலார் கொள்கையோடு ஒத்து நிற்றல் காண்க.
     நிறையுயிர் முயற்சியின் உள்வளி துரப்ப 
     எழுமனுத் திரளுரங் கண்ட முச்சி 
     மூக்குற் றிதழ்நாப் பல்லனத் தொழிலின் 
     வெவ்வே றெழுத்தொலி யாய்வரல் பிறப்பே. நன். 74) 
  என வரும் நன்னூற் சூத்திரம் எழுத்துக்களின் பொதுப் பிறவியினைக் கூறுவதாகும். உயிரினது முயற்சியால் உள்ளே rr.”