பக்கம்:தோழி நல்ல தோழிதான்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

8 வல்லிக்கண்ணன்

அதிர்ச்சி உண்டாக்கியது. நீர்த்துளிகள் மேலெழுந்து எங்கும் சிதறித் தெறித்தன.

இந்த விபத்தை, ராஜம்மா மட்டுமே முன்கூட்டி, உணர்ந்தாள். டாக்ஸ்யியின் சக்கரங்கள் நீரில் பாய்ந்ததுமே, அவள் ‘ஊஊ... ஊய்ய்!’ என்று கீச்சிட்டு ஒரு துள்ளுத்துள்ளி பின்னால் விலகிக் கொண்டாள். மற்ற இருவரும் திடுக்கிட்டு அவளை நோக்கிய வேளையில், நீர்த்துளிகள் அவர்கள்மீது பட்டு விட்டன.

‘ஐயே!’ என்றாள் தங்கம்.

‘செச்சே!’ என்று வருத்தப்பட்டான் இளைஞன்.

‘டாக்ஸி ஹோலி-ரங்க ஹோலி கொண்டாடி விட்டு ஓடுகிறது. பரவால்ல. காய்ந்ததும் சரியாகிவிடும்’ என்று ராஜம்மா சொன்னாள். அவனையும் தங்கத்தையும் மாறிமாறிப் பார்த்துக்கொண்டே பேசினாள் அவள்.

அவன் அசட்டுச் சிரிப்பு சிரித்துக் கொண்டு மேலும் கீழும் பார்த்தபடி நின்றான். பிறகு ‘என்ன இருந்தாலும் இந்த டாக்ஸிக்காரங்க செய்வது அநியாயம். இப்படியா கண்ணை மூடிக் கொண்டு வேகமாகப் போவது?’ என்றான்.

“அது சரிதான், நமது கண்களும் சரியாகக் கடமையை செய்வதில்லை. சில சமயங்களில், ஏதாவது ஒரு காரியத்தில் தீவிரமாக ஆழ்ந்து, சுற்றுப்புறத்தைக் கவனிக்க மறந்து விடுகின்றன” என்று வம்பளந்தாள் ராஜம்.

“சும்மா இருக்க மாட்டியா, ராஜம்?” என்று தங்கம் முணுமுணுத்தாள்.

இவள் பெயர் தெரியவில்லையே என்று பார்க்கிறீர்களா? இவள் தங்கம்! என்று அவனுக்கு எடுத்துச் சொன்னாள் தோழி.