பக்கம்:நபிகள் நாயகம்-சரித்திர நிகழ்ச்சிகள்.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

84



மக்கள் முன்னும் பின்னும் தங்கள் நோக்கம் போல் வந்து, தொழுது வந்தார்கள்.

குறிப்பிட்ட நேரத்தில், மக்களைத் தொழுகைக்கு அழைப்பதற்கு ஒரு திட்டமான அடையாளம் இல்லாததால், தொழுகை நேரத்தில் மக்களை அழைத்து வருவதற்காகச் சிலரை நியமிக்கலாம் எனப் பெருமானார் கருதினார்கள். ஆனால், அவ்வாறு செய்வது மிகவும் சிரமமாக இருக்கும் என்பதால், எல்லோரும் கூடி ஆலோசித்தனர்.

ஒவ்வொருவரும் ஒவ்வொரு யோசனை கூறினார்கள்:

“தொழுகை நேரத்தில், மக்கள் பார்க்கும்படியான உயரமான இடத்தில் ஒரு கொடியைக் கட்டச் செய்யலாம்” என்றார் ஒருவர்.

“தொழுகை நேரத்தில், மணி அடிக்கச் செய்யலாம்” என்றார் மற்றொருவர்.

“சங்கு ஊதலாம்” என்றனர் சிலர். “அடையாளத்துக்காக, நெருப்பைக் கொளுத்தலாம்” என்று சிலர் கூறினர்.

அவற்றை எல்லாம் பெருமானார் அவர்கள் அங்கீகரிக்கவில்லை.

இறுதியாக, உமர் அவர்கள், (இப்பொழுது நடைமுறையில் இருந்து வரும்) பாங்கு-தொழுகைக்காக அழைக்கும் முறையை பெருமானார் அவர்களிடம் கூறினார்கள். அவர்களும் மகிழ்ச்சியோடு அதை ஒப்புக் கொண்டார்கள்.

முதன்முதலாக, அம்முறை, அந்தப் புதிய பள்ளி வாசலிலேயே தொடங்கப்பட்டது.


64. சகோதர உணர்ச்சி

குறைஷிகள் இழைத்த கொடுமைகளுக்கு ஆளாகித் துரத்தப்பட்டு, மதீனாவுக்கு வந்த முஸ்லிம்கள் வெறுங் கையோடேயே வந்தனர். அவர்களில் பலர் மக்காவில் செல்வத்தோடும், நல்ல நிலையிலும் இருந்த போதிலும், குறைஷிகளுக்குப் பயந்து வெளியேறியதால், எதையுமே கொண்டு