பக்கம்:நபிகள் நாயகம்-சரித்திர நிகழ்ச்சிகள்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

13



பிலால்-தொழுகைக்கு அழைப்பொலி முழங்க, முதன்முதலில் நியமிக்கப்பட்டவர். இவர் நீக்ரோ இனத்தவர். இவருடைய தந்தை ரபாஹ். அபிசீனியாவிலிருந்து பிலால் அடிமையாகப் பிடிக்கப்பட்டு மக்காவுக்குக் கொண்டு வரப் பட்டார். மிகவும் துன்புற்றவர். அபூபக்கர்(ரலி) இவரை அடிமைத் தளையிலிருந்து விடுவித்தனர். இவர் இறுதி வரை நாயகம் அவர்கள் ஊழியத்திலேயே இருந்தார்.

புதைல் இப்னு வர்கா-இவர் குலா கூட்டத்தின் தலைவர். பெருமானாரிடம் அபிமானம் கொண்டு குறைஷிகளின் நடவடிக்கைகளை அவ்வப்போது தெரிவித்துக் கொண்டிருந்தவர்.

ஜஃபர்-அபூதாலிப் அவர்களின் மூன்றாவது மகன். அலி அவர்களின் தமையனார். குறைஷிகளின் கொடுமைகளைச் சகியாமல், அபிசீனியாவுக்குச் சென்ற முஸ்லிம்களை, தங்களிடத்தில் ஒப்படைக்க வேண்டும் என்று குறைஷிகளில் சிலர் அபிசீனியா அரசரிடம் சென்று, இஸ்லாத்தைப் பற்றியும், பெருமானாரைப் பற்றியும் கோள் மூட்டினார். அப்பொழுது ஜஃபர் அங்கே சென்று, பெருமானாரின் பெருமையைக் கூறி, எதிரிகளின் சூழ்ச்சிககளை முறியடித்தவர்.

ஜைத் இப்னு ஹாரிதா-கிறிஸ்துவக் குடும்பத்தில் பிறந்தவர். இவர் சிறைப் பிடிக்கப்பட்டு, சிரியாவில் ஹகீம் இப்னு ஹிஷாமிடம் அடிமையாக விற்கப்பட்டார். ஹகீம், தம் மாமி கதீஜா நாச்சியாரிடம் ஜைதை அன்பளிப்பாகக் கொடுத்தார். அவர், பெருமானார் அவர்களிடம் ஊழியத்துக்காக வந்தார். அப்பொழுது அவருக்கு வயது பதினெட்டு. பெருமானார் அவர்கள் அடிமையிலிருந்து அவரை விடுவித்து விட்டனர். அவர் இறுதி வரை பெருமானார் அவர்களுடனேயே இருந்தார். அடிமைகளில் இவரே, முதலாவதாக இஸ்லாத்தைத் தழுவியவர். ஜைதுடைய மகனார் உஸாமா, புகழ் மிக்க இராணுவத் தளபதியாக விளங்கினார்.

ஹம்ஸா-இவர் அப்துல் முத்தலிபின் கடைசி மகன். நாயகம் அவர்களின் சிறிய தந்தை. சிறந்த போர் வீரர். “இஸ்லாமிய சமயச் சிங்கம்” என்ற புகழ் பெற்றவர். உஹத் போரில் உயிர் துறந்தார்.