பக்கம்:நபிகள் நாயகம்-சரித்திர நிகழ்ச்சிகள்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

12



பர்ராஸ்-இவர் பனூ ஆமிர் கோத்திரத்தைச் சேர்ந்தவர். நாயகம் அவர்களின் வாக்கு வன்மையைக் கண்டு வியந்து, பகைவர்களை ஒழிக்கத் தாம் துணை புரிந்தால், தமக்குத் தலைமைப் பதவி கிடைக்குமா என பேரம் பேசினார்.

பாத்திமா-நபிகள் நாயகம் அவர்கள்- கதீஜா(ரலி) அவர்களின் அன்பு மகளாவார். இவருக்குப் பல பெயர்கள் உண்டு. சுவர்க்கத்தின் பேரரசி என்று அழைக்கப்பட்டவர். தம் தந்தைக்கு உண்டான இன்னல்களை நேரில் கண்டு வருந்தியவர். இவருடைய 15-வது வயதில் அலிக்கும் இவருக்கும் திருமணம் நிகழ்ந்தது. இருவரும் எளிய வாழ்க்கை நடத்தினர். நாயகம் அவர்களின் பிரிவு தாளாமல், இரவு பகலாக அழுது, ஆறு மாதங்களுக்குப் பிறகு 29-வது வயதில் இறந்துவிட்டார்.

மாரியா கிப்தி-மிஸ்று நாட்டு கிறிஸ்துவ மதத் தலைவர் முகெளகிஸ், பெருமானாருக்குப் பரிசாக அனுப்பி வைத்த இரண்டு பெண்களில் ஒருவரான இவரைப் பெருமானார் மணம் புரிந்து கொண்டனர்.

முத்யிம் இப்னு அதி-இவர் குறைஷிகளில் ஒருவர். இவர் இஸ்லாத்தைத் தழுவவில்லை எனினும், மனிதாபிமான உணர்ச்சியோடு, தம் மக்கள் இருவருடன் சில நாட்கள் பெருமானாருக்குப் பாதுகாப்பாக இருந்தார்.

முஸ் இப்னு உமைர்-இவர் ஹாஷிமின் கொள்ளுப் பேரர். அர்க்கம் இல்லத்தில், பெருமானாரின் இஸ்லாமியப் பிரச்சாரம் நிகழும் போது இவர் இஸ்லாத்தைத் தழுவினார். அது வரை வந்திருந்த திருக்குர்ஆன் வசனங்கள் யாவும், இவருக்கு மனனமாக இருந்தன. யத்ரிபுக்கு, இஸ்லாத்தின் பிரச்சாரத்திற்காக, இவரைப் பெருமானார் அனுப்பி வைத்தார்கள்.

பிஷ்ரு-பெருமானார் அவர்களின் தோழர்களில் ஒருவர். அம்பு எய்வதில் வல்லவர். ஹைபர் போரின் முடிவில், யூதப்பெண் அளித்த விருந்தில் நஞ்சு கலந்த இறைச்சியை உண்டு, உயிர் துறந்தார்.