48
நம் நேரு
மகன் ஜெயில்வாசம் அனுபவிக்க நேரிடுமே என்கிற எண்ணம் அவர் இதயத்தை உலுக்கியது. இருவரிடையும் மனவேற்றுமை நீடித்தபோதிலும் சுமுகமாகப் பழகவே முயன்றார். ஜெயிலில் தரையில்தான் படுத்துறங்கவேண்டியிருக்கும், அந்த அனுபவம் எத்தனைக்கஷ்டம் விளைவிக்குமோ என்ற கவலை தந்தையைப் பெரிதும் வாட்டியது. அதன் தன்மையை உணர்வற்காக மோதிலால் சில இரவுகள் வெறுந்தரையில் படுத்துத் தூங்க முயன்றார் என்கிற விஷயம் புதல்வருக்குப் பின்னர்தான் புரிந்தது. இதிலிருந்தே தந்தை மகனிடம் கொண்டிருந்த அன்பின் அளவை ஓரளவு உணரலாமன்றோ?
எப்படியும் சத்தியாக்கிரக இயக்கத்தில் பங்கு கொள்வது என்று ஜவஹர்லால் முடிவு செய்துவிட்டார். மோதிலால் நேரு காந்திஜீக்குக் கடிதம் எழுதி அவரை அலகாபாத்துக்கு வரவழைத்தார். இருவரும்நெடுநேரம் பேசினார்கள். என்ன பேசினர்கள் என்பது நம் நேருவுக்குத் தெரியாது. முடிவில் காந்திஜீ ஜவஹரிடம் அவசரப்பட வேண்டாம் என்றும், தந்தைக்கு மனக் கஷ்டம் தரக்கூடிய முறையில் நடந்து கொள்ள வேண்டாம் என்றும் ஆலோசனை கூறினர். காந்திஜீயின் புத்திமதி ஜவஹருக்கு வருத்தம் அளிக்கத் தான் செய்தது.
ஆனாலும், எதிர்பாராது நிகழ்ந்த சம்பவங்கள் அவரது பிரச்னைக்கு முடிவு கட்டி விட்டன. சத்தியாக்கிரக சபை திடீரென்று தனது போராட்டத்தை நிறுத்திக் கொண்டது.