உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நற்றிணை-2.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

10

நற்றிணை தெளிவுரை


தெளிவுரை : "மலைக்கண்ணே வாழ்கின்றவனான குறவனின் அன்புக்குரிய இளமகள் அவள். அவள் நின்னால் பெறுவதற்கு அரியவள்; நின்னால் நெருங்குவதற்கும் அரிதான காவலிடத்தே இருப்பவள்; நின் சொல்லைக் கேட்டு எதிரேற்றுக் கொள்ளுதற்கு ஏற்றவாறு முதிர்ச்சியடையாத சிற்றிளம் பருவத்தினள். அத்தன்மையளாகிய அவளை நீயும் காமுற்று அடைவதற்கு நினைத்தல் பொருந்தாது" என்கின்றவனாகிய பாங்கனே!

செவ்விய பழங்கள் பொருந்திய வேர்ப்பலா மரங்களையுடையது கொல்லிமலை. அதன்கண், தெய்வக்காவலையுடையதனாலே தீமையில்லாத, நெடிய கோட்டினின்றும் வீழுகின்ற அழகிய வெள்ளிய அருவியினது மேற்குப் பக்கத்ததான பாறையிடத்தே அமைந்திருப்பது, கொல்லிப் பாவை. காற்று மோதி இடித்தாலும், மிக்க மழைத்துளிகள் விரைய வீழ்ந்தாலும், இடிகள் சினந்து உருமித் தாக்கினாலும், இத்தகைய இயற்கையினாலான ஊறுகள் வேறு பலவும் தோன்றினாலும், அன்றி இந்தப் பெருநிலப் பகுதியே நிலநடுக்கத்தால் நடுங்குமாயினும், தான் கொண்டுள்ள, கண்டாரைக் கவர்கின்ற தன் உருவப் பேரழகினின்றும் என்றும் அழியாதிருக்கின்ற நிலைத்த தன்மையைக் கொண்டது அக்கொல்லிப் பாவை. அதனைப் போலவே, நீ யாது கூறினும், அன்றி யாது நேரினும், அவளும் என் நெஞ்சத்தே நீங்காதாளாகி நிலை பெற்றனள்; அதனைவிட்டு எக்காலத்தும் போவாள் அல்லள். இனி, யான்தான் யாது செய்வேனோ?

சொற்பொருள் : காதல் மகள்—அன்புக்குரிய மகள்; அருந்தவமிருந்து பெற்ற செல்வ மகள்; பேரன்பு காட்டிப் பேணி வளர்த்த மகளும் ஆம். மடமகள்—இளமகள்; மடப்பத்தை உடைய மகளும் ஆம்; மடமாவது நன்மை தீமை தெளியாப் பேதைமை. பெற லருங் குரையள்—பெறுதற்கு அரியவள். கடி—காவல், காப்பினள்—காவலுக்கு உட்பட்டவள். எதிர்கொள்ளல்—எதிரேற்று விடை கூறல், செவ்வேர்ப் பலா—சிவந்த வேர்ப்பலா; சற்றே சிவந்த சுளைகளைக் கொண்ட இது பலாவிற் சிறந்தது; பயம்—பழம். கோடு—மலைமுகடு. குடவரை—மேற்குப்பகுதி மலைச்சாரல். கால்—காற்று. உடன்று—சினந்து. பெருநிலம்—பெரிய நிலவுலகம். கிளரினும்—நடுக்கமுற்றாலும். 'பாவை' என்றது, கொல்லிப் பாவையை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை-2.pdf/16&oldid=1659836" இலிருந்து மீள்விக்கப்பட்டது