உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நற்றிணை-2.pdf/252

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

246

நற்றிணை தெளிவுரை



நினைத்தலும் நினைதிரோ வைய வன்றுநாம்
பணைத்தா ளோமைப் படுசினை பயந்த
பொருந்தாப் புகர்நிழல் இருந்தன மாக
நடுக்கஞ் செய்யாது நண்ணுவழித் தோன்றி
ஒடித்துமிசை கொண்ட வோங்குமறுப்பு யானை
பொறிபடு தடக்கை சுருக்கிப் பிறிதோர்
அறியிடை இட்ட அளவைக்கு வேறுணர்ந்து
என்றூழ் விடரகம் சிலம்பப்
புன்தலை மடப்பிடி புலம்பிய குரலே!

தெளிவுரை : ஐயனே! உடன்போக்கில் உம்முடன் வந்த அந்நாளிலே, பருத்த அடியைக் கொண்ட ஓமை மரத்தின் தாழ்ந்த கிளைகளினாலுண்டான, நிழல் என்னும் சொல்லுக்குப் பொருந்தாத புள்ளிபட்ட நிழலிடத்தே, களைப்பாறுதலின் பொருட்டாகத் தங்கியிருந்தோம் அன்றோ! அப்போது, நமக்கு எவ்வித நடுக்கத்தையும் செய்யாதாய், நாமிருந்த இடத்து வழியாகவே வந்து தோன்றிற்று, உயர்ந்த தந்தங்களையுடைய யானை ஒன்று. தழையை ஒடித்துத் தின்னுதலை மேற்கொண்டதான உயர்ந்த தந்தத்தையுடைய அந்த யானையானது, புள்ளியையுடைய தன் நெடிய கையினைச் சுருட்டித் தூக்கியபடியே, பிறிதொன்றனை அறிகின்றதன் காரணமாக, இடையீடுபட்டுப் பிளிறியது. அது அவ்வாறு பிளிறியவுடனே, அதனை வேறாகக் கருதிற்றாய், அதன் புல்லிய தலையையுடைய இளைய பிடியானையானது, வெயில் பரவிய மலைப்பிளப்பிடம் எல்லாம் எதிரொலிக்குமாறு குரலெடுத்துப் புலம்பிற்று. அதன் அத்தகு புலம்பற் குரலையும் கேட்டிருந்தீர் அல்லவோ! அதனைக் கேட்டிருந்தீர் ஆயின், கொடிய சுரநெறியில் எம்மைப் பிரிந்து செல்லாதிருப்பீர்; நும் காதலியான இவளைப் பிரியாதும் இருப்பீர் அல்லவோ!

கருத்து : 'நும் பிரிவை இவள் பொறுத்து நீர் வரும் வரைக்கும் உயிர் தரியாள்' என்பதாம்.

சொற்பொருள் : நினைத்தல் – பண்டு நிகழ்ந்ததனை நினைவு கூர்தல். பணைத்தாள் – பணைத்த அடிமரம்; பணைத்தல்–பருத்தல்; பனைத்தாள் ஓமை என்றும் வேறுபாடம். படு சினை – தாழ்ந்த கிளை; பட்டுப்போன கிளையும் ஆம். பொருந்தா–பொருத்தமல்லாத; அஃதாவது நிழல் என்று சொல்லுதற்குப் பொருந்தாத. புகர் – புள்ளி; புகர் நிழல் – புள்ளிபட்ட நிழல்; நிழலும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை-2.pdf/252&oldid=1679030" இலிருந்து மீள்விக்கப்பட்டது