உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நற்றிணை-2.pdf/293

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நற்றிணை தெளிவுரை

287


தன்னுடைய பேடையைக் கூட்டிடத்தே வருமாறு உயிரே போகும்படியாகக் கூவியதாக, அது வந்து சேர்ந்து, அதனோடு கூடிக்கலந்து இன்பமடையும் வரைக்கும் அழைத்துக்கொண்டே இருக்கும், பிரிவுத்துயரைக் கொண்ட நாரையினைப் பார். யான் எவ்வாறு எங்ஙனம் என் துயரத்தை மறந்து கைவிடுவேனோ? அதுதான் என்னால் இயலாததாகின்றதே என்பதாம்.

கருத்து : 'என்னால் அவரைக் காணாது இருக்க இயலவில்லையே!' என்று வருந்திக் கூறியதாம்.

சொற்பொருள் : கடுங்கதிர் ஞாயிறு – கடுமையான வெப்பக் கதிர்களையுடைய ஞாயிறு அடும்பு – அடும்பின் கொடி; குதிரைக் குளம்புபோல பிளந்த இலையுடைய கொடிவகை இது. தேர் இன் ஒலி; இனிமை, தனக்கு அதனால் ஏற்படும் உணர்வு. இறப்பு – அளவு கடந்து. மால்கொள் – மயக்கம் கொள்ள; பொழுது மயங்க எனினும் ஆம். ஆடு அரை – பருத்த அடிமரம். அசைந்தாடும் அடிமரம் எனினும் ஆம், இது பனையின் இயல்பாதலால். தோடு மடல் – தோடாகிய மடல்; அதனிடத்தே நாரை இருந்தபடி என்று கொள்க. கொடுவாய் – வளைந்த வாய். கடைஇ – கூப்பிட்டு. பயிர்தல் – அழைத்தல். பைதல் – காமத்துன்பம். அம் – அழகிய; 'அம் குருகு' என்றது. அது, தன் காதலியை ஆசையோடு விரும்பிக் கூவி அழைத்துக் சேர்ந்து மகிழ்ந்து இன்புறுத்தியதனால்.

விளக்கம் : கடற்குருகும் தன் பேடைபால் அன்பு காட்டிக் கூடி மகிழும் செவ்வியுடையதாயிருப்ப, நம் தலைவரோ நம்மை அறவே மறந்தனர் என்பதாம். 'நெடுந்தேர் இன்னொலி' தோன்றா என்றதால், அவன் மணம்வேட்டு ஊரறிய வருவதை எதிர்பார்த்து உரைத்ததும் ஆம்; அப்போது அடும்பு கொடி துமிய ஆழி போழ்வது போல அலர்வாய்ப் பெண்டிர் பேச்சடங்கி ஒதுங்க, அவன் வெளிப்படையாகவே வருவான் என்று கொள்க.

பயன் : தன்னுடைய துயரம் அவனை அடைந்தன்றித் தீராது என்று, தன் நிலைமையைத் தோழி உணருமாறு விளக்கிக் கூறியதாம்.

339. என்னோ பண்பு ?

பாடியவர் : சீத்தலைச் சாத்தனார்.
திணை : குறிஞ்சி.
துறை : சிறைப்புறமாகத் தலைவன் கேட்பச் சொல்லியது.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை-2.pdf/293&oldid=1681617" இலிருந்து மீள்விக்கப்பட்டது