24
நற்றிணை தெளிவுரை
207. பெருமீன் நினைத்த சிறாஅர்!
- பாடியவர் : ஆவூர்கிழார் மகனார் கண்ணனார்.
- திணை: நெய்தல்.
- துறை : நொதுமலர் வந்துழித் தோழி செவிலிக்கு அறத்தொடு நின்றது.
[(து – வி.) தலைவியின் களவு உறவை அறிந்தனள் தோழி. அவள், தலைவியை மணம்பேசி நொதுமலர் வந்தபோது அதிர்ச்சி அடைகின்றாள். தலைவியின் உறவைப் பற்றிய உண்மையைத் தன் தாயாகிய செவிலியிடம் உரைக்கின்றாள். இவ்வாறு அமைந்தது இச்செய்யுள். செவிலி நற்றாய்க்கும், நற்றாய் தந்தைக்கும் உரைக்கத், தலைவியின் காதலனையே அவளுக்கு மணமுடிக்க அவர்கள் இசைவார்கள் என்பது இதன் பயனாகும்.]
கண்டல் வேலிக் கழிசூழ் படப்பை
முண்டகம் வேய்ந்த குறியிறைக் குரம்பைக்
கொழுமீன் கொள்பவர் பாக்கம் கல்லென
நெடுந்தேர் பண்ணி வரல்ஆ னாதே;
குன்றத் தன்ன குவவுமணல் நீந்தி
5
வந்தனர் பெயர்வர்கொல் தாமே? அல்கல்,
இளையரும் முதியரும் கிளையுடன் குழீஇக்
கோட்சுறா எறிந்தெனக் கீட்படச் சுருங்கிய
முடிமுதிர் வலைகைக் கொண்டு பெருங்கடல்
தலைகெழு பெருமீன் முன்னிய
10
கொலைவெஞ் சிறாஅர் பாற்பட் டனளே!
தெளிவுரை : கண்டல்களை வேலியாகக் கொண்டதும், உப்பங்கழிகள் சூழ்ந்ததுமான தோட்டக் கால்களிலேயுள்ள, நீர்முள்ளிச் செடிகளாலே வேயப்பெற்ற குறுகிய இறைப்பையுடைய குடிசைகளிலே வாழ்பவர் பரதவர்கள். கொழுமையான மீன்களை வேட்டையாடிக் கொள்பவரான அவர்களது பாக்கம் ஆரவாரிக்கும்படியாக, நெடிய தேரானது, செல்லுதற்கு ஏற்றவாறு பண்ணப்பட்டு வருதலிலே என்றும் தவிர்வதில்லை. குன்றைப் போலக் குவிந்து கிடக்கின்ற மணல் மேடுகளைக் கடந்து வருகின்ற அவர்தான், இனி வறிதே தான் மீள்வாரோ? அங்ஙனம் நேர்வதாயின்—