உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நற்றிணை நாடகங்கள்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நீயோ அறிவாய்


3

நீலப்பட்டு உடுத்தது போன்ற நெடுங்குன்றம்—அது நிறைய அடர்ந்துள்ள பச்சைப் பசுங்காடு—அந்தப் பச்சிருளைப் பிளந்துகொண்டு வெள்ளிப் பாற்கடலே வெளிப்படச் சிற்றிடம் பெற்று வளைந்து திரும்பிப் பின் நேரே உயரத்தில் இருந்து கீழே துள்ளி விழுவது போன்ற அருவி—அதுவோ பாறைமீது விழுந்து பல பல அருவிகளாய்ச் சிதறுகின்றது. சிதறுண்ட அவை பாடிக்கொண்டே கை கோத்துக் கூத்தாடிப் படிப்படியாய்க் கீழ் இறங்கிவந்து பாய்கின்றன. இவ்வாறு ஓர் அழகிய இயற்கைக் காட்சி இயைந்துநிற்கிறது.

குயிலோடு மாறு கூவியும், மயிலோடு மாறு ஆடியும் மரங்களைச் சுற்றிக்கொள்ளும் கொடிகள்போல வளைந்து வளைந்து மலர் பறித்தும் உயிர் ஒளி வீசுகின்றார்கள் சில பெண்கள். அவர்கள் அனைவரும் ஓர் உயிர்போல் இயங்குகின்றனர். அவர்களது உயிராக ஒருத்தி விளங்குகிறாள்; அவளே அவனது உயிராகவும் இயங்குகிறாள், அவனுடைய கண்ணிலும் கருத்திலும்.

அந்தத் தோழிமார் கூட்டத்தில் அவள் ஒருங்கு இயைந்துவிடுகிறாள். ஒரே குரல் ! ஒரே பாட்டு ! ஒரே ஆடல் ! ஒரே பேச்சு ! ஒரே உயிர் ! இயற்கையோடு இயைந்து இயற்கையே உடலாய், இயற்கையே உயிராய்,

இயற்கையே அணிகலனாய், இயற்கை வாழ—இயற்கையே உலகமாய் ஓங்க—இன்பமாய்ச் சிறக்க—இயங்கி வருகிறது இந்தக் கூட்டம், இந்த ஆயம். அன்பின் பேர்ஒளி விளக்கே இந்த ஆயம்; இதன் உயிர்ச் சுடர் அவள்.

3