உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நற்றிணை 1.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நற்றிணை தெளிவுரை

137


தோன்றி தோன்றுபு புதல் விளக்கு அறாஅ
மதர்வை நல்ஆன் மாசுஇல் தெண்மணி
கொடுங்கோற் கோவலர் குழலோடு ஒன்றி
ஐதுவந்து இசைக்கும் அருள்இல் மாலை
ஆள்வினைக்கு அகன்றோர் சென்ற நாட்டும் 10
இனைய வாகித தோன்றின்
வினைவலித்து அமைதல் ஆற்றலர் மன்னே!

பலவான கதிர்களையுடையது ஞாயிற்று மண்டிலம். அம் மண்டிலமானது பகற்பொழுதினைச் செய்து தன் கடமையை முடித்தது. அதன்பின், மிகவுயர்ந்த பெருமலைக்கண் சென்று, அவ்விடத்தே மறைதலையும் செய்தது. பறவைகள் தம்முடைய குஞ்சுகள் இருக்கும் கூடுகளிற்சென்று அங்கே அடைந்தன. காட்டிடத்துள்ள பெரும் பிடரியையுடைய கலைமானானது தன் இளைதான பிணையைத் தழுவியபடியே இன்புறலாயிற்று. முல்லை அரும்புகளும் இதழ் அவிழ்ந்தவாய் மலர்ந்தன. பலவிடங்களிலும் தோன்றிப் பூக்கள் தோன்றின. அவை புதர்கள்தோறும் விளக்கேற்றினாற்போல் விளங்கலாயின. செம்மாப்பையுடைய நல்ல பசுக்களின் குற்றமற்ற தெளிவான மணியோசையானது, வளைந்த கவைக்கோலையுடைய கோவலரது குழலிசையோடும் கலந்ததாய் மெல்லென வந்து இசைக்கின்றது. பிரித்து வருந்தியிருப்பவர்பால் அருளற்றதான இத்தகைய மாலைக்காலமானது. பொருளீட்டிவரும் முயற்சிப் பொருட்டாகப் பிரிந்துபோயின தலைவர் சென்றுள்ள நாட்டினிடத்தேயும் இத் தன்மையுடைத்தாகித் தோன்றினால் நன்றாயிருக்கும். அவரும் வினைக்கண்ணே உறுதி கொண்டு அவ்விடத்துத் தங்கியிருப்பவர் ஆகார். அவ்வாறு இம் மாலை அங்குத் தோன்றாமையாலேதான் என் வாணாளும் இப்படிக் கழிகின்றது போலும்!

கருத்து : மாலை செய்யும் நோயினை அவரும் உணர்ந்திருப்பின், குறித்த பருவத்திலே தவறாது மீண்டிருப்பார் அல்லரோ, என்பதாம்.

சொற்பொருள் : பார்ப்பு –– பறவைக் குஞ்சு. இரலை - கலைமான். தோன்றி – தோன்றிப்பூ; செங்காந்தட்பூ. மதர்வு – செம்மாப்பு. கொடுங்கோல் – முனைக்கண் வளைவுடைய கவைக்கோல்; கோடுதல் – வளைதல்.


ந.—9

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை_1.pdf/138&oldid=1678172" இலிருந்து மீள்விக்கப்பட்டது