உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நற்றிணை 1.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நற்றிணை தெளிவுரை

143


சொற்பொருள் : பெரியோர் – பெருந்தகுதி உடையோர்; என்றது, தலைவனைக் குறித்துக் கூறியதாம். செயிர் – குற்றம். சூழல் – கருதல். கானல் – நெய்தலங்கானல்.

விளக்கம் : இத்துறைக்கு இயையக் கொள்வதாயின், தோழி, தலைவியின் கருத்தைத் தன்னுடைய கருத்தாகக் கொண்டு, தலைவனுக்கு வரைதல் வேண்டுமென்பதை அறிவுறுத்தக் கருதினளாய்ச் சொன்னதாகக் கொள்க. 'உயிரோர் அன்ன செயிர்தீர் நட்பு' என்பது, நட்பினிற் சிறந்த நிலை: உடலால் இருவராயினும் உயிரால் ஒருவரேயாகிப் பிறரது இன்பதுன்பங்களைத் தமதாகவே கொள்ளும் கலப்பு இது. இதனால் 'மறைத்தல் யாவது?' என்கின்றாள், 'தாயறியின் ஏதமாம்' என்றபோதும் பிரியக்கருதாத பேரன்பினன், 'தோழியர் அறிவர்' எனக் கூறிப் பிரிந்துபோதலை, அவனது அன்பின் தளர்வாகக் கொண்டு கூறுகின்றாள். இந்த அச்சம் நீங்கவும், சூளுரைத்த சொற் பேணவும். அவன் தலைவியை முறையாக மணந்து கொள்ளவே விரைய மேற்கொள்ளுதற்கு உரியதென்பதாம்.

மேற்கோள் : 'தலைவி, தலைவனோடு தன் திறத்து ஒருவரும் ஒன்று உரையாதவழித் தனது ஆற்றாமையால், தன்னொடும் அவனோடும் பட்டன சில மாற்றம் தானே கூறுதலும் உள' என்னும் விதிக்கு மேற்கோளாக, இச் செய்யுளைத் தலைவி கூற்றாகக் காட்டுவர் ஆசிரியர் நச்சினார்க்கினியர்- (தொல். பொருள். சூ. 111 உரை.)

இனி, 'வேற்று வரைவுவரின் அது மாற்றுதற்குக் கூறிய தலைவியின் கூற்றாக இச் செய்யுளைக் காட்டி, அச்சத்தின் அகறற்குச் செய்யுள்' என உரைப்பர் இளம்பூரணனார். (தொல்.பொருள். சூ. 109 உரை.).

இவையிரண்டும், இச் செய்யுளைத் தலைவி கூற்றாகக் கொள்ளவே சிறப்புடைத்தெனக் காட்டும். அவ்வாறு பொருத்திக் கண்டும் பொருளுணர்ந்து இன்புறுக.

73. பசலையும்! அம்பலும்!

பாடியவர் : மூலங்கீரனார்.
திணை : பாலை.
துறை : செலவுக் குறிப்பறிந்து வேறுபட்ட தலைவி சொல்லியது.

[(து–வி.) தலைவன் பிரிந்து செல்லுதற்கு நினைந்தானாதலைக் குறிப்பினால் உணர்ந்து, நலனழிந்தாளான தலைவி, தன்னை வினாவிய தோழிக்குக் கூறுகின்றனள்.]

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை_1.pdf/144&oldid=1678201" இலிருந்து மீள்விக்கப்பட்டது