உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நற்றிணை 1.pdf/226

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நற்றிணை தெளிவுரை

225


திலிருந்து கேட்டவாறு, தலைவனை நினைந்து யானும் வருத்தமுற்றிருந்தேன். அதுதான் பெரிதும் இரங்குதற்குரியது அல்லவோ!

கருத்து : 'இரவுக் குறியைக் கைவிட்டுத் தலைவியை மணந்து கூடிவாழ்தலே நன்றாகும்' என்பதாம்.

சொற்பொருள் : வியல் அறை – அகன்ற பாறை. கெண்டி – கிளைத்துத் தோண்டி. முணக்கல் – புதைத்தல். மருகு – தெரு. சிறுகுடி – சிறிதான குடியிருப்பு; சிற்றூர். பையாப்பு – வருத்தம். அல்கல் – இரவு. பொறித்த – புள்ளியுண்டாக்கிய. நிவப்பு – உயர்வு. ஈர்ங்குரல் – ஈரியகுரல்; ஈரிய – இரண்டாகப் பிளந்து சென்ற.

விளக்கம் : ஆற்றிலிறங்கிய பிடியானது. ஆற்றின் இழுப்பினாலே தளர்வுற்றுப் பாறையைப் பற்றி நிற்க, அதனைக்காத்தற்கு இறங்கிய களிற்றினை ஆறு அடித்துச் சென்றது. என்பது, தலைவியது பிரிவாகிய கலக்கத்தைத் தீர்க்கக் கருதிய தலைவன், தன் துயரைப் பொருட்டாக்காது இரவுப்போதில் வருவானாயினும், அவனுக்கு இடையூறு நேருமோவெனத் தாம் கலங்குவேம் என்பதனை உணர்த்துவதாம். இரவுக்குறி நாடி வருதலை நினைந்தும் வருந்துவோம்; பிரிதலையும் பொறுக்கேம்; ஆதலின், இனி வரைந்து மணந்து கொள்ளுதலில் அவன் உளஞ் செலுத்துதலே செயத்தகுந்தது என்கின்றாளுமாம். 'வைகித் கேட்டு' என்றது, தான் துயிலொழிந்திருந்த நிலையைக் கூறியதாம். இதனால், இவர்களது மனப்பாங்கை அறியலுறும் தலைவன் தலைவியை மணந்து பெறும் இல்வாழ்வினை நாடுபவனாவான் என்பதும் விளங்கும். ஆற்றுப் புதுவெள்ளத்தைக் கண்டு அடைந்த அச்சத்தினாலே தோழி இப்படி உரைப்பதாகவும் கொள்ளலாம். இரவுக்குறி இடையிடுபட்ட காலத்துப் பிற்றை நாளிலே உரைத்ததாகவும் கொள்க.

'மையல் மடப்பிடி இனையக் கையூன்றுபு இழிதரு களிற்றைப்போலக் காமநோயாலும் பிரிவுத்துயராலும் வழியின் ஏதத்திற்கு நடுங்குதலானும் நலிந்திருக்கும் தலைவிக்கு உதவுமாறு தலைவன் விரைந்து மணவினையின் நாட்டஞ்செலுத்தி, அவளுக்கு உறுதுணையாக அமைதல் வேண்டும், என்பதுமாம்.

பிற பாடம் : புலாவம் சிறுகுடி; மையின் மடப்பிடி.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை_1.pdf/226&oldid=1689930" இலிருந்து மீள்விக்கப்பட்டது