நற்றிணை தெளிவுரை
235
(2) 'முசுப் பெருங்கலை நன் மேயல் ஆரும்' தகைமை போல, வரைந்து மணந்து கொள்ளின் அவனும் தலைவியோடு பேரின்பம் துய்த்துக் களித்தல் வாய்க்கும் என்பதாம்.
உள்ளுறை : தினை கவரும் கேழலை அகப்படுத்தவைத்த பொறியுள்ளே வயப்புலி சிக்கினாற்போல, விரும்பிய இவனை இழப்பினும், இவனினும் சிறந்தானாகிய தலைவன் ஒருவன் தலைவியை வரைந்து மணத்தலைக்கருதி வந்தனன் என்பதாம்.
விளக்கம் : அவன் வரைந்து கொள்ளுதலில் முயலாததன் பயனே, அவன் இன்பமிழப்பதும், தலைவிக்குத் துயரிழைப்பதும் ஆதலின், அவனது புலவியை அது எத்துணைப் பெரிதாயினும் யாம் பாராட்டேம் என்பதாம்.
மேற்கோள் : "தினையுண் கேழல் இரிய என்னும் நற்றிணையுள், 'யாவது, முயங்கல் பெறுகுவன் அல்லன், புலவிகோள் இறீயதன் மலையினும் பெரிதே' என்பது நொதுமலர் வரைவு சிறைப்புறமாகக் கூறியது" எனக் காட்டுவர் நச்சினார்க்கினியர் (தொல். பொருள். பொருளியல் சூ. 16 உரை மேற்கோள்.) 'குளவியொடு கூதளம் ததைந்த கண்ணியன்' எனவும், 'பன்மலர்க் கான்யாற்று உம்பர்' எனவும் வருதல், கார்காலம் வந்ததைக் காட்டுவதாம்.
120. முறுவல் காண்கம்!
- பாடியவர் : மாங்குடி கிழார்.
- திணை : மருதம்.
- துறை : விருந்து வாயிலாகப் புக்க தலைவன் சொல்லியது.
[(து–வி.) பரத்தை உறவிலே நாட்டமுற்றுப் பிரிந்து சென்ற தலைவனிடத்தே தலைவி பெரிதும் ஊடல் கொண்டிருந்தனள். ஒருநாள் வீட்டிற்கு விருந்தி வரக்கண்ட தலைவன், தானும் அவர்களோடு கலந்து கொண்டான். விருந்தினர் நடுவே அவனை வெறுத்து நோக்க விரும்பாத அவளும், ஏதும் கூறாளாய் விருந்து சமைப்பதிலேயே ஈடுபட்டுவிட்டனள். அவளது அந்த அமைதியை வியந்து தலைவன் தன் நெஞ்சோடு கூறிக்கொள்வதுபோல அமைந்தது இது]
தடமருப்பு எருமை மடநடைக் குழவி
தூண்தொறும் யாத்த காண்தகு நல்லில்
கொடுங்குழை பெய்த செழுஞ்செய் பேதை