உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நற்றிணை 1.pdf/235

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

234

நற்றிணை தெளிவுரை


கடும்புஆட்டு வருடையொடு தாவன உகளும்
பெருவரை நீழல் வருகுவன் குளவியொடு
கூதளம் ததைந்த கண்ணியன் யாவதும்
முயங்கல் பெறுகுவன் அல்லன்; 10
புலவி கொளீஇயர், தன் மலையினும் பெரிதே.

புனத்திற்கு உரியோனாகிய குன்றவன், தினையுண்ணும் விலங்குகளை அகப்படுத்தக் கருதி அமைத்துவைத்த சிறிய பொறியிடத்துள்ள பெருங்கல்லின் கீழாகத், தினைப்பயிரை உண்டுகொண்டிருக்கும் காட்டுப் பன்றிகள் அஞ்சியோடுமாறு, ஒள்ளிய நிறத்தையும் வலிமையையும் கொண்ட புலியானது வந்து அகப்பட்டுக் கொள்ளுகின்ற நாட்டினன் தலைவன். அவன், யாராலே தரப்பட்டு நம்பால் வந்தனனாயினும் ஆகுக! இனிய முசுவினது பெரிதான ஆணானது கொல்லையிடத்தே நல்ல உணவினைப் பெற்று உண்பதான, பல்வகை மலர்களோடும் வரும் காட்டாற்றினது மேற்புறத்தை, கரிய கலைமானானது வருடைமானின் கூட்டத்துடனே தாவிக் குதித்தபடி செல்லாநிற்கின்ற, பெரிய மூங்கிற்புதரின் நிழலினிடத்தே அவன் வருவான்! அவன் மலைப் பச்சையுடனே கூதளத்து மலரையும் சேர்த்துக் கட்டிய கண்ணியுடனும் திகழ்வான்! ஆயினும், எவ்வளவேனும், தலைவியது முயக்கத்தை இனிப் பெறுவான் அல்லன். தன் மலையினுங் காட்டில் பெரிதாக அவன் புலந்து கொள்ளினும் கொள்ளுக!

கருத்து : 'இனி, அவள் மணந்து கொண்டன்றித் தலைவியைக் களவானே அடைவது இயலாது' என்பதாம்.

சொற்பொருள் : கேழல் – பன்றி. புனவன் – புனத்திற்கு உரியோன். பொறி – எந்திர அமைப்பு. கேழ் – நிறம், மேயல் – மேய்ச்சல். சுடும்பு - கூட்டம்; ஆட்டு மந்தை, வரை – மூங்கில். மலைப்புறமும் ஆம். குளவி – காட்டு மல்லிகையும் ஆம்; மலைப் பச்சை – கூதளம் - கூதளம் பூ; 'கூவிளம்' என்றும் பாடம்; பொருள் வில்வம்'.

இறைச்சி : (1) 'கருங்கலை கடும்பாட்டு வருடையொடு தாவன உகளும் நீழல் வருகுவன்' என்றது, வேற்று வரைவு நேரின் அதற்கு ஒத்திசையாது வேறுபடத் தோன்றுவாளாகிய தலைவியை அவன் நினையானாயினன் என்பதாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை_1.pdf/235&oldid=1690691" இலிருந்து மீள்விக்கப்பட்டது