உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நற்றிணை 1.pdf/247

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

246

நற்றிணை தெளிவுரை


பைங்காய் நல்லிடம் ஓரீஇய செங்காய்க்
கருங்கனி ஈந்தின் வெண்புறக் களரி
இடுநீறு ஆடிய கடுநடை ஒருத்தல்
ஆள்பெறல நசைஇ நாள்சுரம் விலங்கித்
துனைதரும் வம்பலர்க் காணாது அச்சினம் 5
பனைக்கான்று ஆறும் பாழ்நாட்டு அத்தம்–
இறந்துசெய் பொருளும் இன்பம் தரும்எனின்,
இளமையின் சிறந்த வளமையும் இல்லை;
இளமை கழிந்த பின்றை, வளமை
காமம் தருதலும் இன்றே, அதனால் 10
நில்லாப் பொருட்பிணிச் சேறி
வல்லே நெஞ்சம் வாய்க்கநின் வினையே!

நெஞ்சமே! ஈந்தின் நல்ல மேற்புறத்து எம்மருங்கும் விளங்கிய பசுங்காய்கள் காலத்தால் முதிர்ந்து செங்காய்களாகிப், பின் கருங்கனியாய் முதிர்ந்து உதிர்தலையும் செய்யும். அத்தகைய ஈந்த மரங்களை உடையது வெளிய புறத்தினை உடையதான களர் நிலம். கடிய நடையை உடைய களிறொன்று, அக் களரிடத்தே நடந்து வருதலாற் படிந்த வெண்புழுதியை உடையதாயிற்று. அஃது அதன்பின் வழிவருவாரைக் கொல்லுதலை விரும்பியதாய், விடியற் காலத்தே அச்சுரத்தின் கண்ணே குறுக்கிட்டுச் சென்றது. விரைய வந்தபடியிருக்கும் புதியவர் எவரையும் காணாதாய்ச் சினமிகுந்ததாயிற்று. அங்குக் கண்ட பனைமரத்தை மோதிச் சாய்த்துச் சினம் தணிந்தது. பாழ்த்த நாட்டிடத்தான வழியின் தகைமை அத்தகையது! அதனைக் கடந்து சென்று நாம் ஈட்டிவரும் பொருளும் நமக்கு ஓரளவிற்கு இன்பந் தருவதுதான். எனினும், இளமைப் பருவத்தினைக் காட்டினும் காமநுகர்ச்சிக்குரிய வளமான பருவம் யாதுமில்லை. இளமை கழிந்ததன் பின்னர்ப் பொருளினது வளமையானது காமலின்பத்தைத் தருதல் கூடும் என்பதோ கிடையாது. அதனாலே, நிலையற்றதான பொருளாசையென்னும் பிணியின்பாற் கடிதாகச் செல்லுகின்றனையாகிய நீயும், அங்ஙனமே, அதன்பாலேயே செவ்வாயாக! நின் செயல் நினக்கு வந்து வாய்ப்பதும் ஆகுமாக!

கருத்து : 'நிலைநில்லாப் பொருளின்பாற் பற்றோடு செல்லுதலைக் கைவிட்டு விடுவாயாக' என்பதாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை_1.pdf/247&oldid=1692330" இலிருந்து மீள்விக்கப்பட்டது