உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நற்றிணை 1.pdf/273

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

272

நற்றிணை தெளிவுரை


அகன்ற வாயையும் உடையதுமான, கார்மேகத்தைப் போல விளங்கும் யானையது. விவாப்புறத்தால் உராயப்படுதலினாலே அடிப்பக்கம் பொரிந்துள்ள உட்டுளை பொருந்திய காய்களையுடைய கொன்றை மரங்கள் காட்டிடையே விளங்கும். அவை, குன்றிடத்தின் கண்ணே வாழ்பவரான நெடிய சடைக்கற்றையினையும் அசைவற்ற உடலினையுங் கொண்ட தவசியர்களைப் போலவும் தோன்றும். அவை பலவும் உடன்சேர நிற்பவாகவும். கோடை நெடிது நீடிய இடங்களிலே அழகு செய்த வண்ணமும் நிற்கும், செல்லுதற்கு அரிதான அத்தகைய சுரநெறியும் நினக்குக் கடத்தற்கு எளியதாகும் போலும்!

பட்ட பகைவரது பிணங்களைப் பருந்தினம் மொய்த்துத் தின்னுமாறு, பகைவரது தேர்ப்படையோடு பொருதி வெற்றி கொண்டவன், பலவாய சருச்சரையை உடைய பெரிய கைகளைக் கொண்ட, தலையேந்திய கொம்புகளோடு விளங்கும் யானைப்படைக்கு உரியோனாகிய புகழை விரும்பும் கிள்ளி வளவன். அவனது, புதுவதாக அணிசெய்யப் பெற்ற உயர்ந்த கொடியானது விளங்கும் அம்பர் நகரைச் சூழ்ந்த அரிசிலாற்றின் அழகிய தெளிந்த அறல்மணலைப் போன்றது, இவளது விரிந்து தழைத்த கூந்தல். இதன்கண் துயிலுதலைக் கைவிட்டு, யானும் பிரிந்து வாழ்வேன் அல்லேன்!

கருத்து : இவளைப் பிரிதலை யான் மேற்கொள்ளேன்' என்பதாம்.

சொற்பொருள் : இருஞ்சே – கரிய சேறு கொடுங்கவுள் – வளைந்த கவுள்: கவுள் – மோவாய். கயவாய் – அகன்ற வாய். மாரி யானை – கரிய யானை. மருங்குல் – விலாப்புறம். ஞெமிர்தல் – பரத்தல். ஆடா மேனி – அசையாத உடல்; நீராடுதலையும் நீத்திருக்கும் புழுதி படர்ந்த உடலுமாம். என்றூழ் – கோடை. பொற்ப – அழகுதிகழ. பாண்டில் – தேர்ப்படை. பிணர் – சருச்சரை; செதிள் செதிளாக விளங்கும் தன்மை.

விளக்கம் : அரிசிலாற்றங்கரையில் இருந்த 'அம்பர்' எனும் நகரைச் சோழன் கைப்பற்றிய வெற்றிச் இச்செய்யுள் காட்டுகின்றது. அம்பர்கிழான் அருவந்தையைக் கல்லாடனார் பாடிய புறப்பாட்டு 'காவிரியணையும் தாழ்நீர் படப்பை நெல்விளை கழனி அம்பர் கிழவோன்' என்கின்றது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை_1.pdf/273&oldid=1693352" இலிருந்து மீள்விக்கப்பட்டது