உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நற்றிணை 1.pdf/317

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

316

நற்றிணை தெளிவுரை


தமக்கொரு இடையூறும் இல்லாதவராகச் சென்று வருவாராக என்று நீதான் கருதினாயல்லை. இதனாலே தான் என் சொற்களைக் கேட்டுத் தெளிந்தாயல்லை போலும்!

கருத்து : 'நின் மனத்துயரைத் தாமும் உணர்ந்தவராக அவரும். விரையச் செயலை முடித்துப் பொருளுடன் மீண்டனர்; காண்பாயாக' என்பதாம்.

சொற்பொருள் : செங்கதிர் – செம்மையான கதிர்; வெம்மையாற் செம்மையுற்ற கதிர்கள். செங்கோல் வாளி – செவ்விய கோலான அம்பு; எய்யப்பெற்ற குறியிடத்தே குறி தவறாதாய்ச் சென்று தைக்கும் வாளியும் ஆம். கொடுவில் – கொடுந்தொழிலைச் செய்யும் வில்; வளைந்த வில்லும் ஆம். உயிர்த்திறம் – உயிராகிய தன்மை; உயிர்.

விளக்கம் : 'ஊறிலர் ஆகுதல் உள்ளாமாறே' என்றது, பிரிவினை நினைத்து வருந்திய வருத்த மிகுதியினாலே, தன் காதலனின் நன்மையை நினைக்கும் தன்மையினையும் இழந்தனள் என்பதாம். 'நன்று செய்தனர்' என்றது. அவன் ஈட்டிக் கொணர்ந்த பொருளின் மிகுதியை நோக்கிச் சொல்லியதாகும். பிணங்களினின்றும் வீசிய படுமுடை பசியோடிருந்த நரியையும் பிணத்தை உண்பதற்குச் செல்லாவாறு செய்தது என்க. அன்றி, அதுவும் கொலை மறவர்க்கு அஞ்சியதாய் அகன்றது என்பதும் கொள்ளப்படும்; இதனாற் காட்டது கொடுமை மேலும் சுட்டப்பட்டது. நரிகள் பிணந்தின்னும் இயல்பினவாதலைப் 'பிணந்தின் குறுநரி' (புறம்.359) என வருவதனாலும் அறியலாம்.

இறைச்சி : முடைநாற்றத்தால் அறிந்து உயிரிழந்த பிணத்தை தின்னவந்த நரியும் அதனையுண்ண மாட்டாதாய் அகன்றது என்பது, அவ்வாறே தலைவனைப் பிரிந்து தளர்ந்த தலைவியைப்பற்றி உண்ண வந்த பசப்பும், தலைவனை வரக்கண்டதும் அஞ்சிப் பற்றமாட்டதாய் அகன்றது என்பதாம்.

165. தூது பல்கின!

பாடியவர் : .........
திணை : குறிஞ்சி.
துறை : நொது மலர் வரையும் பருவத்து, தோழி தலைவிக்கு அறத்தொடு நிலைபயப்பச் சொல்லியது; வரைவு மலிந்ததூஉம் ஆம்.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை_1.pdf/317&oldid=1696085" இலிருந்து மீள்விக்கப்பட்டது