உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நற்றிணை 1.pdf/366

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நற்றிணை தெளிவுரை

365


சொற்பொருள் : படுநீர் – ஆழமான நீர்; சிலம்பு – பக்கமலை. கலித்த – முளைத்தெழுந்த; தோன்றிய. மோசை – ஒருவகை விரலணி. தேம் – தேன்; தேன் முதிர்தலாவது. தேனடைகளுட் பலநாளிருந்து முதிர்ச்சி பெறுதல். தடை இய – முளைத்து வளர்ந்த. வேய் – மூங்கில்.

விளக்கம் : "சான்றோனைப் போல நின்னை என்றும் பிரியேன் எனக் கூறித் தெளிவித்துக் கூடியின்புற்ற நீ, இது காலை இவளை மணத்தலைக் கருதாயாய், இவள் நின்னைப் பிரிந்து வருந்தும் வருத்தத்தாலே அழிதலையும் நினையாயாய், இன்ப நாட்டமே மிகுதியாகப் பெற்றுள்ள பொய்ம்மையாளன் ஆயினை போலும்?" எனத் தலைவனைப் பழித்து உரைக்கின்றாள் தோழி. "நினக்குத் தன் நலனை அளித்து இன்புறுத்திய இவளுக்கு, அதனால் நலனழிவு வந்துற்றதாகலின் 'நன்றி விளைவும் தீதொடு வரும்போலும்?' என்று கேட்டாளாய் மனம் வருந்துகின்றாள். படுநீர்—பள்ளமான நீர் நிலைகளும் ஆம்; அப்போது பள்ளமான நீர்நிலைகளையுடைய சிலம்பு எனக் கொள்ளுக. வாழைப்பூக் காந்தளைத் தொட்ட படியிருத்தல் தோள்வளையைத் தொடும் மாதரது கைகளிடத்தே விளங்கும் மோசைபோலத் தோற்றும் என்றதனாலே, இவ் விரலணி வாழைப்பூவின் வடிவம் பொருந்திய மேற்புறத்தை உடையதென்பதும் அறியப்படும். மோசை போலத் தோன்றுவதன்றி அதுவே மோசையாகாமை போல, நீயும் அன்புடையானாகத் தோன்றுகின்றனை யன்றி, அன்பினை உடையாயல்லை என்றனளுமாம். 'அழியலள்' என்றது, அன்றே நின் இத் தன்மையினை ஆய்ந்தறித்திருப்பின், நின்னைத் தழுவியிராள். இதுகாலைப் பிரிவால் வருத்தமுற்று அழிதலும் இவட்கு நேர்ந்திராது என்பதாம். இவ்வாறு கூறிப் பகற்குறி மறுத்தனள் என்க. இதனால் வரைவு வேட்டலும் ஆயிற்று.

189. வங்கம் போவாரோ?

பாடியவர் : ......
திணை : பாலை.
துறை : பிரிவிடை மெலிந்த தலைமகளைத் தோழி வற்புறுத்தியது.

[(து–வி.) தன்னைப் பிரிந்து தலைமகன் வேற்றூர்க்குப் போயினதனாலே வருந்தி மெலிந்தாள் ஒரு தலைமகள்; அவட்கு 'சொன்ன சொற்பிழையானாய்த் தலைமகன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை_1.pdf/366&oldid=1706903" இலிருந்து மீள்விக்கப்பட்டது