உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நற்றிணை 1.pdf/367

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

366

நற்றிணை தெளிவுரை


விரைய மீள்வன்' என வலியுறுத்திக் கூறி, அவளது நலிவைப் போக்குதற்கு முற்படுகின்றாள் தோழி.]

தம்மலது இல்லா நம்நயந்து அருளி
இன்னும் வாரார் ஆயினும் சென்னியர்
தெறலருங் கடவுள் முன்னர்ச் சீறியாழ்
நரம்பிசைத் தன்ன இன்குரற் குருகின்
கங்கை வங்கம் போகுவர் கொல்லோ? 5
எவ்வினை செய்வர்கொல் தாமே? வெவ்வினைக்
கொலைவல் வேட்டுவன் வலைபரிந்து போகிய
கானப் புறவின் சேவல் வாய்நூல்
சிலம்பி யம்சினை வெரூஉம்
அலங்கல் உலவையம் காடிறந் தோரை? 10

கொடிய தொழிலான கொலைத்தொழிலினைச் செய்தலிலே வல்லவனாகிய ஒரு வேட்டுவன்; அவ் வேட்டுவனது வலையிடத்தே அகப்பட்டு அதனை அறுத்துக்கொண்டு தப்பிச் சென்றது காட்டுப்புறாவின் சேவல் ஒன்று. தன்

வாயிடத்து உண்டாகும் நூலினாலே சிலம்பி கட்டியுள்ள கோட்டையைக் கண்டதும். அப் புறவுச்சேவல் அதனையும் வலைபோலுமெனக் கருதினதாய் வெருவிற்று. சூறைக்காற்றுச் சுழன்று அடிக்கின்றதும். அத்தன்மையுடையதுமான சுரத்தினிடத்தே சென்றுள்ளவர் நம் தலைவர். அவர் தாம் தம்மை உடனில்லாதே வாழ்தலில்லாத நம்மை விரும்பியவராக அருளிச் செய்தலைக் கருதி, இன்னும் நம்பால் வந்திலர். அங்ஙனம் வாராராயினும் "அவர்தாம் குறித்துச் சென்றுள்ள இடத்திற்கு அல்லாதே வேறு பிறிதான எவ்விடத்துக்கும் சென்றிருப்பார் போலும்? பெற்று உண்ணுஞ்சென்னி யென்னும் உண்கலத்தை உடையோரான பாணர்கள் சினந்தணிதற்கரிய தெய்வத்தின் முன்னர்ச் சென்றாராய், அதன் சினந்தணியுமாறு சிறிய யாழினது நரம்புகளைத் தடவி இசை எழுப்புவர்; அத்தகைய இனிய யாழோசையைப் போலும் குரலினைக் கொண்டவான குருகினங்களை உடைய கங்கையாற்றின் கண்ணே வங்கத்தேறிச் செல்வார் போலும்? அல்லாதே வேறு எத் தொழிலைச் செய்வார் கொல்லோ?" என நினைத்து ஏங்காதே. எதனையும் அவர் செய்யார். நின்பால் விரைய மீள்வர். அதுகாறும் நின் துயரத்தை நீயும் ஆற்றியிருப்பாயாக என்பதாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை_1.pdf/367&oldid=1706906" இலிருந்து மீள்விக்கப்பட்டது