உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நற்றிணை 1.pdf/368

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நற்றிணை தெளிவுரை

367


கருத்து : பிரிந்து போயின காதலர் தம் சொற்பிழையாராய் விரைய நின்பால் மீள்வர்; ஆதலின் நீ தான் நின் பெருகும் பிரிவுத்துயரை ஆற்றியிருப்பாயாக என்பதாம்.

சொற்பொருள் : சென்னியர் – சென்னியை உடையோர்; சென்னி – மண்டையோடு போல்வதொரு பிச்சைப் பாத்திரம். இவர் சீறியாழ் இசைத்தனர் என்பதனாற் 'பாணர்' எனக் கொண்டோம். சிலம்பி – சிலந்திப் பூச்சி. வங்கம் – படகு. கங்கை வங்கம் – கங்கை பாயும் வங்க நாடும் ஆம்.

விளக்கம் : 'காதலனும் காதலியுமாகிய தலைவன் தலைவியர் இருவரும் தம்முள்ளே ஒன்று கலந்த உயிரன்பினர்' என்பாள், 'தம்மலது இல்லா நம்', என்றனள். அவனும் தம்மை விரும்புபவன் எனினும், அவன் பிரிவுக்குத் துணிந்தனன் ஆதலின், அவனினும் காட்டில் தம்முடைய காதலன்பே பெரிதென்பாளாக இவ்வாறு கூறினளும் ஆம். 'தெறலருங் கடவுள்' என்றுரைத்தது நெற்றிக் கண்ணோனாகிய சிவபிரானை. சினந்தணியுமாறு இன்னிசை எழுப்புவர் என்றது, இசையின் இனிமைக்குச் சினத்தை மாற்றும் ஆற்றலுண்டு எனக் காட்டுவதாகும்; இராவணன் இசைத்ததை நினைக்க. சீறியாழ் – சிறிய யாழ்; இவற்றை உடையோரைச் 'சிறுபாணர்' என்பர்; பேரியாழை உடையோர் 'பெரும்பாணர்' ஆவர். 'கங்கை வங்கம் போகுவர் கொல்லோ' என்னும் சொற்கள், அவன் அவ்வெல்லையளவுஞ் செல்லான்; அதற்கிடைப்பட்ட நாடுகளிலேயே தன் செய்தொழிலை முடித்துக் கொண்டானாக விரையத் தலைவிபால் மீள்வான்? என்பதை உணர்த்துதற்காம். இதனாற் பிரிந்த தலைவன் வடநாட்டிற்குச் சென்றமை பெறப்படும். பெரிமயத்திற்கு முன்னர்க் கங்கைக் குருகுகள் ஒலி செய்தலைச் சீறியாழ்ப்பாணர் தெறலரும் கடவுள் முன்னர் அவரைப் போற்றி யாழிசைத்த தன்மைக்கு உவமித்தனர்.

இறைச்சி : வேட்டுவனது வலையிலே அகப்பட்டுத் தப்பிச் சென்ற புறவுச் சேவலானது சிலம்பியின் வலை தனக்கொரு கேடுஞ் செய்யாதாகவும், அதனையுங் கண்டு தன்னை முன்னர் அகப்படுத்துக்கொண்ட வலையினது நினைவினாலே அஞ்சினாற் போல, முன்னர்க் களவுக்காலச் சிறுபிரிவுக்கே பெரிதும் நலனழிந்த தலைவியை அறிந்தவனான தலைவன், இதுகாலை மேற்கொண்ட தன் பிரிவை நீட்டியானாய் விரையத் திரும்புவன் என்பதாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை_1.pdf/368&oldid=1706908" இலிருந்து மீள்விக்கப்பட்டது