உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நற்றிணை 1.pdf/412

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாடிய சான்றோர்கள்

411


சேகம்பூதனார் 69

மதுரை எழுத்தாளன் சேந்தம்பூதனார் என்பவரின் பெயரே இவ்வாறு பிழைபட எழுதப்பெற்றிருத்தல் கூடுமென்பர். மதுரைக் கடைச்சங்கத்து ஏடெழுதும் பணியைச் செய்து வந்தாரான இவர், தாமும் தமிழறிந்த சான்றோருள் ஒருவராக விளங்கினராதல் வேண்டும். அக நானூற்றுள் இரண்டும் (84, 207), குறுந்தொகையுள் மூன்றும் (90, 226, 247), இந்நூலுள் இரண்டும் (69, 247) இவர் செய்தவாக விளங்கும் செய்யுட்களாம். சொல்லழகும், பொருள்வளமும், உவமைத்திறமும் அமைந்தவை இச்செய்யுட்கள் அனைத்தும். பிரிந்துறையும் தலைவி மாலை நேரத்திலே படுகின்ற வேதனை மிகுதியை இச்செய்யுள் நமக்குக் காட்டுகின்றது.

சேந்தங் கண்ணனார் 54

சேந்தன் என்பாரின் மகன்; கண்ணன் என்னும் பெயரினர். இச் செய்யுளும் அகநானூற்று 350 ஆவது செய்யுளும் இவராற் செய்யப்பெற்றனவாம். அகநானூற்றுச் செய்யுளுள் கொற்கைத் துறையிடத்தே பரதவர்கள் மீன் வேட்டமாடியவராக வந்திறங்கும் காட்சியைக் காட்டுகின்றனர். காமநோய் மிகுந்த தலைவியானவள் கடற்குருகினைத் தன் பொருட்டுத் தலைவனிடம் சென்று தூது உரைத்து வருமாறு சொல்லுவதாகச் சுவைகனிய அமைந்த செய்யுள் இதுவாகும்.

தனிமகனார் 153

'வெஞ்சின வேந்தன் பகையலைக் கலங்கி, வாழ்வோர்ப் போகிய பேரூர்ப் பாழ்காத்திருந்த தனிமகன் போன்று' என இச்செய்யுளுள் உவமித்த நயம்பற்றி இப்பெயரால் இவர் குறிக்கப் பெற்றுள்ளார். எழில்நலம் அனைத்தும் தலைவனைப் பிரிதலால் இழந்துவிட்டாளாக உயிர் காத்திருக்கும் உடம்போடு விளங்கும் தலைவியின் தனிமை நிலைக்கு நல்ல உவமை இதுவாகும். இத்துடன் போரின் வெம்மைக் காற்றாவாய்ப் பாழ்படும் ஊர்களினது அவல நிலையையும் இச்செய்யுளாற் காணலாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை_1.pdf/412&oldid=1711077" இலிருந்து மீள்விக்கப்பட்டது