நற்றிணை தெளிவுரை
63
மாஇரும் பரப்பகம் துணிய நோக்கிச்
சேயிறா எறிந்த சிறுவெண் காக்கை
பாய்இரும் பனிக்கழி துழைஇப் பைங்கால்
தான்வீழ் பெடைக்குப் பயிரிடூஉ கரக்கும்
சிறுவீ ஞாழல் துறையுமார் இனிதே;
5
பெரும்பலம் புற்ற நெஞ்சமொடு, பலநினைந்து,
யானும் இனையேன்—ஆயின், ஆனாது
வேறுபல் நாட்டில் கால்தர வந்த
பலவுறு பண்ணியம் இழிதரு நிலவுமணல்
நெடுஞ்சினைப் புன்னைக் கடுஞ்சூல் வெண்குருகு
10
உலவுத்திரை ஓதம் வெரூஉம்
உரவுநீர்ச் சேர்ப்பனொடு மணவா ஊங்கே.
தோழீ! ஒன்றோடொன்று பொருந்தாதனவும், பல்வேறு தன்மைகளைக் கொண்டவுமான பற்பல நாடுகளினின்றும், காற்றுக் கலங்களைச் செலுத்துதலினாலே, அக் கலங்களிற் சென்றுவரும் வணிகர்கள் கொண்டுதர, வந்து சேர்ந்த பண்டங்கள் பலவும் இறக்கியிடப்பட்டிருக்கும், நிலவைப் போன்ற வெண்மை கொண்ட மணற்பரப்பினிடத்தேயுள்ள நெடிதான புன்னையினது கிளையிலே, முதிர்ந்த சூலினையுடைய வெள்ளிய குருகானது தங்கியிருக்கும். கரையிடத்தே வந்து உலவுகின்ற அலைகளின் ஓசைக்கு அக்குருகும் வெருவா நிற்கும் தன்மையுடைய, வலிய நீர்ப்பரப்பினைக் கொண்ட கடற்கரை நாட்டினனான தலைவனோடு, நான் கூடி மணம் பெறாததன் முன்பாக நன்றாயிருந்தேன்.
பெரியதும், கரிய நீரைக் கொண்டதுமான கழிப்பரப்பானது நீர் தெளிந்திருந்த செவ்வியை நோக்கி, அதனிடத்தேயுள்ள சிவந்த இறாமீனைப் பற்றுவதற்குப் பாய்ந்த சிறிய வெண்காக்கை, பரவிய பெரிய குளிர்ச்சியுடைய கழியிடத்தைத் துழாவியதாய்த் தான் விரும்பும் பசிய கால்களையுடைய தன் பெடையை அழைத்துத் தான் பற்றிய இறாலை அதற்குக் கொடுத்து இன்புறும் தன்மையினையுடையதும், சிறு பூக்களைக் கொண்டதுமான ஞாழலந்துறையும் முன்பு இனிதாகவேயிருந்தது. ஆனால், இப்போதோ, அதுவும் துன்பந்தருவதாயுள்ளது. பெரிதும் வருத்தங்கொண்ட நெஞ்சத்தோடு. பலவற்றையும் நினைந்தவளாக, யானும் இத்தன்மையள் ஆயினேன்; இதனைக் காண்பாயாக!