பக்கம்:நல்ல தீர்ப்பு, பாரதிதாசன்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அங்கம் 2


காட்சி 1


[பிறை நாட்டின் அரண்மனையில் ஒரு பகுதி இளவரசி முல்லை மணித் தவிசில் வீற்றிருக்கிறாள். தோழிமார் பலர் புடை சூழ்ந்திருக்கிறார்கள். முல்லையின் தந்தையும், பேரரசனுமாகிய வயவரி மன்னனும் பேரரசி கன்னலும் வருகிறார்கள். மங்கல முரசு அதிர்கின்றது]

பேரரசர் : வாழிய குழந்தாய். தமிழ் நன்று. அது தமிழர்க்கு உறுதி பயப்பது. அதை இன்னும் நீ பயில்க! தமிழறிவு பெறுக. பிறை நாட்டின் எதிர் கால அரசி நீ. அறம் இது, மறம் இது என்று ஆய்ந்துணர்க. வாழிய நீடு வாழிய!

பேரரசி : அன்புக்கொரு மகளே, முல்லையே மணம் எய்துக உனது பதின்மூன்றாம் ஆண்டு தொடங்கிற்று. நீ வாழிய!

முல்லை : உங்கள் வாழ்த்து நன்று. என்பால் தங்கட்குள்ள அன்புக்கு நன்றி! தந்தையார் வாழ்க, அன்னையார் வாழ்க, தமிழ் வாழ்க.

[முல்லை பணிகின்றாள்]
[பேரரசும் பேரரசியாரும் போகின்றார்கள்]

நிலவு, சாலி, தாழை, பொன்னி, தோரை முதலிய பெண்கள், தத்தம் இயல்புக்கேற்ற கையுறையுடன் வருகிறார்கள்.

தோரை--தான் கொணர்ந்த தங்கப்பானை யடுக்கிய வெள்ளியுறியை முல்லைக்குத் தந்து--வாழிய இளவரசியே என்று வாழ்த்துகிறாள்.