அங்கம் 2
காட்சி 1
[பிறை நாட்டின் அரண்மனையில் ஒரு பகுதி
இளவரசி முல்லை மணித் தவிசில்
வீற்றிருக்கிறாள். தோழிமார் பலர் புடை
சூழ்ந்திருக்கிறார்கள். முல்லையின் தந்தையும்,
பேரரசனுமாகிய வயவரி மன்னனும் பேரரசி
கன்னலும் வருகிறார்கள். மங்கல முரசு
அதிர்கின்றது]
பேரரசர் : வாழிய குழந்தாய். தமிழ் நன்று. அது
தமிழர்க்கு உறுதி பயப்பது. அதை இன்னும் நீ
பயில்க! தமிழறிவு பெறுக. பிறை நாட்டின் எதிர்
கால அரசி நீ. அறம் இது, மறம் இது என்று
ஆய்ந்துணர்க. வாழிய நீடு வாழிய!
பேரரசி : அன்புக்கொரு மகளே, முல்லையே மணம்
எய்துக உனது பதின்மூன்றாம் ஆண்டு தொடங்கிற்று.
நீ வாழிய!
முல்லை : உங்கள் வாழ்த்து நன்று. என்பால் தங்கட்குள்ள
அன்புக்கு நன்றி! தந்தையார் வாழ்க,
அன்னையார் வாழ்க, தமிழ் வாழ்க.
[முல்லை பணிகின்றாள்]
[பேரரசும் பேரரசியாரும் போகின்றார்கள்]
நிலவு, சாலி, தாழை, பொன்னி, தோரை முதலிய
பெண்கள், தத்தம் இயல்புக்கேற்ற கையுறையுடன்
வருகிறார்கள்.
தோரை--தான் கொணர்ந்த தங்கப்பானை யடுக்கிய
வெள்ளியுறியை முல்லைக்குத் தந்து--வாழிய
இளவரசியே என்று வாழ்த்துகிறாள்.