பக்கம்:நல்வாழ்வுக்கு வழி.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

8

மூதுரை முத்து

முளைப்பது அரிசியே. ஆனாலும், அதைச் சுற்றியுள்ள உமி விலகிப் போய் விடுமானால், அரிசியானது தனித்து முளைப்பதில்லை. அதைப்போல், ஆற்றலுடைய வீரனாயினும் அவனைச் சுற்றியிருந்த கருவி, சார்பு, ஏவல் முதலியன விலகிப்போய் விடுமானால், அவனால் எதையும் செய்ய முடிவதில்லை.

11

தாழம் பூ பெரியது. மகிழம் பூ சிறியது. எனினும், தாழை மடலுக்கு இருக்கும் மணத்தைவிட் மகிழம் இதழுக்குள்ள மணம் அதிகம். ஆகவே, எவரையும் உருவத்தைக் கொண்டு மட்டும் கணிப்பது தவறாகும். ஏனெனில், கடல் மிகப் பெரியது. அதன் நீர் கழுவுவதற்கும் கூட உதவாது. ஊற்று மிகச் சிறியது, எனினும் அதன் நீர் அருந்துவதற்கும் ஏற்றதாக இருக்கும்.

12

அடர்ந்த காடுகளில் பெரிய கிளைகளைத் தாங்கி நிற்கின்ற மரங்கள் அவ்வளவு நல்ல மரங்கள் அல்ல. பலர் கூடிய அவையில், கொடுத்த நூலைப் படிக்க முடியாமல் நிற்பவர்களும், அவையின் குறிப்பை உணர முடியாமல் இருப்பவர்களுமே நல்ல மரங்கள் ஆவர்.

13

மயிலானது தனது சிறகை விரித்து ஆடுவதைக் கண்ட வான்கோழியும் தன் சிறகை விரித்து ஆடத் தொடங்குவது நகைப்பிற்குரியது. அதுபோல, கற்றவர்கள் சில கவிகளுக்குப் பொருள் விரித்துக் கூறுவதைக் கண்ட் மற்றவர்களும், கற்றவர் அவையில் பொருள் விரித்துக் கூறத் தொடங்குவது நகைப்பிற்குரியதே.

14

வேங்கைப் புலியின் நோயை நீக்கிய மருத்துவன் அப் புலியின் பசிக்கு அப்போதே உணவு ஆனானாம். அது போலப் பிறர் செய்த நன்றியை அறியும் ஆற்றலற்ற மக்களுக்குச் செய்த உதவி, செய்தவனுக்கே தீமையாக முடியும் அல்லது, கருங்கற் பாறைமீது போடப்பட்ட மண் பாண்ட்த்தைப் போல, அப்போதே அழிந்து போய்விடும்.

15