பக்கம்:நவகாளி யாத்திரை.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

24

நவகாளி யாத்திரை


"உந்த நாய் இங்கே எப்படி வந்தது?" அதிசயத்துடன் விசாரித்தேன்.

"மகாத்மாஜி மேற்படி கிராமத்துக்குப் போயிருந்த சமயம் இந்த நாய் அவரைப் பார்த்துவிட்டு ஓடி வந்து அவரைச் சுற்றிச் சுற்றி வந்தது. பிறகு, தன்னுடைய குடும்பத்தார் வெட்டிப் புதைக்கப்பட்டிருந்த இடத்துக்கு மகாத்மாஜியை அழைத்துச் சென்றது. அங்கே சென்றதும் புதைக்கப்பட்ட இடத்தை மோப்பம் பிடித்துப் பிடித்துக் காட்டியது. காந்திஜி மேற்படி நாயின் நன்றி விசுவாசத்தையும், எஜமான பக்தியையும், அபூர்வ அறிவையும் பார்த்து ஆச்சரியப் பட்டுப் போனார். அன்றுமுதல் இந்த நாய் மகாத்மாஜி செல்லும் இடங்களுக்கெல்லாம் பின்தொடர்ந்து வந்து கொண்டே இருக்கிறது" என்று கூறினார் மாணிக்க வாசகம்.

'லூலூ' கோஷம்!

மகாத்மாவைப் பின்பற்றிச் செல்லும் அந்த அதிசய நாயைப் பற்றின சுவாரஸ்யமான சரித்திரம் முடிவதற்கும் நாங்கள் பிரார்த்தனை மைதானத்தை நெருங்குவதற்கும் நேரம் சொல்லி வைத்தாற்போல் இருந்தது. பிரார்த்தனை ஸ்தலத்துக்குள் பிரவேசித்த போது எனக்கு ஒரே வியப்பும் திகைப்பும் ஏற்பட்டன.

ஏனெனில், பிரார்த்தனை மைதானத்தில் கூடியிருந்த அத்தனை பெண்மணிகளும் ஒன்று சேர்ந்து, அழுகிற குழந்தையைத் தொட்டிலிலே போட்டு விளையாட்டுக் காட்டுவதுபோல் "லூலூலூ" என்று விநோதமாகக் குரல் கொடுத்தார்கள் மேற்படி விசித்திர 'லூலூ' கோஷம் இரண்டு நிமிட நேரம் இடைவிடாமல் நடந்தது.