பக்கம்:நவகாளி யாத்திரை.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நவகாளி யாத்திரை

23


வாசலில் சுவான மண்டலம் போட்டுப் படுத்திருந்த ஒரு கறுப்பு நாய் எழுந்து நின்று உடம்பைச் சிலுப்பிக் கொண்டது.

"இது ஏது, இந்த நாய்?" என்று கேட்டேன்.

இதற்குள் மகாத்மாஜி தடியை ஊன்றிக்கொண்டு வெளியே புறப்பட்டு விட்டார். வாசலில் நின்ற நாய் அவரை அணுகிச் சென்றது. 'அச்சா குத்தா!' என்று சொல்லி காந்திஜி சிரித்துக்கொண்டே குனிந்து அதை அன்புடன் தடவிக் கொடுத்தார். பிரார்த்தனைக்குப் போகும் வழியில் நண்பர் மாணிக்கவாசகம் அந்த நாயைப்பற்றிய மயிர்க்கூச்செறியும் பயங்கரச் சம்பவம் ஒன்றை எனக்கு விவரமாகக் கூறினார்.

"நவகாளி ஜில்லாவிலுள்ள நோவாகாலா என்ற ஒரு சிறு கிராமத்தில் பெரிய ஹிந்துக் குடும்பம் ஒன்று இருந்தது. அந்தக் குடும்பத்தில் ஆண் பெண் அடங்கலாக ஒன்பது பேர் இருந்தனர். அந்த ஒன்பது பேரும் வெறிகொண்ட காலிக் கூட்டத்தினரின் வாளுக்குப் பலியாகிக் கூண்டோடு கைலாசமாக யமலோகத்துக்கு அனுப்பப்பட்டார்கள். அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த நாய்தான் இது" என்றார்.