மக்கள் நாகை 1 69
பதினெட்டு
18 வகைக் குடிமக்கள், உலகங்கள் 18, நாடு 18, மொழி 18, இலக்கியம் 18, (மேற்கணக்கு 18, கீழ்க்கணக்கு 18), மங்கலச் சொல் 18. இசைக்கருவிகள் 18, குற்றங்கள் 18, படிகள் 18 (அழகர் மலைப்படி, மாடிப்படி பதினெட்டாம் படிக் கருப்பன்), பதினெட்டாம் ஆடிப்பெருக்கு 18 போர்க்கால எண் 18, (தேவர் அசுரர் காலப்போர் 18 ஆண்டு, இராமாயணப் போர் 18 திங்கள், மாபாரதப் போர் 18 நாள்கள். செங்குட்டுவன் வடநாட்டுப் போர் 18 நாழிகை) சித்தர் 18, புராணம் 18 ஆன்மக் கோட்பாடு 18, கணம் 18, மெய்யெழுத்து 18, பருவ அகவை 18. புதிதாக வாக்குரிமை அகவை 18.
மேலும் இப்பட்டியல் வளருமாயின் 18ஐ, 18 வகையோடு நிறுத்திக்கொள்ளலாம். இப்பதினெட்டு வகை 18களிலும் நாகை நகர் பங்கு பெறுகிறது. என்றாலும் சுருக்கம் கருதிச் சேக்கிழார் வாக்கில் நின்று பார்க்கலாம். அவர் வாக்கிலும் பதினெட்டு வருகிறது.
"நீடு தொல்புகழ் நிலம்பதி னெட்டினும் நிறைந்த
கோடி நீள்தனக் குடியுடன்" (4) என்று சேக்கிழார் 18 நாட்டு மக்களும் நாகை நகரில் நிறைந்திருந்தனர் என்றார். அந்நாட்டு மக்களுடன் இந்நகர மக்களுமாகக் கோடி நீள் செல்வக் குடிகளாக வாழ்ந்தனர் என்றார்.
பதினெட்டு நாடுகள் என்பதைப் "பதினெண் நிலம்" என்பது தமிழ் வழக்கு. இப்பதினெட்டும் தமிழகம், குடகம் (கேரளம்), தெலுங்கம் (ஆந்திரம்), கன்னடம், துளுவம் (கன்னடத்தின் தெற்கு நிலம்), கொல்லம் (மலையாளத்து ஒரு பகுதி), கொங்கணம் (கோவாவின் வடக்கு கூர்ச்சரத்தின் தெற்கு) என்னும் தென் னியந்தியத் திராவிட நிலங்கள் ஏழும், அங்கம் (உத்திர மாநிலப் பனாரசு), வங்கம் (வங்காளம்), கலிங்கம் (ஒரிசா), மகதம் (தென் பீகார்), கவுடம் (வங்காளத்து ஒரு பகுதி), கோசலம் (அயோத்தி) என்னும் வடபுலத்து நிலங்கள் ஆறும் சிங்களம் (இலங்கை), சாவகம் (இந்தோனிசியா தீவகம்) கடாரம் (சுமத்திரை), சீனம், சோனகம் (யவனம் என்னும் அரபியா) என்னும் அயல்நில நாடுகள் ஐந்தும் என்பது தமிழ் நூல் வழக்கு (5).