நம்முடைய தமிழ் நாட்டில் இன்று நாடகக்கலை நல்ல முறையில் வளர்ந்து வருகிறது. மற்ற மொழியாளர்களெல்லாம், பிற நாட்டினரெல்லாம் போற்றிப் புகழும் அளவுக்கு நாம் முன்னேறி வருகிறோம். உண்மைதான். ஆனால் இந்த முன்னேற்றம் நமக்கு எப்படிக் கிடைத்தது? நாடகக் கலை இன்றைய நிலையை அடைவதற்கு நமக்குதவிய பெரியவர்கள் யார்? அதற்காக நாம் எத்தனை ஆண்டுகள் சிரமப்பட்டோம்? நமது பாதையிலே எப்படிப்பட்ட கஷ்டங்களைத் தாங்கி முன்னேற வேண்டி வந்தது என்பதை யெல்லாம் நம்மில் பலர் எண்ணிப் பார்ப்பதில்லை. உண்மையை ஒளிக்காது சொல்ல வேண்டுமானல், சிறப்பாக, சென்றகால நாடக வரலாற்றையெல்லாம் எண்ணிப் பார்த்து நன்கறிந்து தெளிவு பெற்று முன்னேற வேண்டிய கடமையும் உரிமையுமுடைய நாடகக் கலைஞர்களும், நாடகத்துறையிலே நடமாடி இன்று திரைப்படத்துறையிலே இடம் பெற்றுள்ள திரைப்படக் கலைஞர்களும் கூட இதுபற்றி நன்றி யுணர்ச்சியோடு சிந்திக்கிறார்களா என்று நாம் சந்தேகப்படவேண்டி இருக்கிறது.
நடிகன் ஆனேன்
1918-ஆம் ஆண்டில் என் ஆறாவது வயதில் நான் நாடகத்துறையிலே சேர்க்கப் பெற்றேன். கடந்த 49 ஆண்டுகளும் நாடகத்துறையிலேயே என்