பக்கம்:நாடகச் சிந்தனைகள்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதிப்புரை

அமரர் அவ்வை தி. க. சண்முகம் அவர்கள் தமிழ் நாடக உலகத்துக்கு இலக்கணம் வகுத்தவர். தமிழ் நாடக உலகத்துக்காகவே உயிர் வாழ்ந்தவர். தமிழ் நாடகங்கள் உலகோர் முன்னிலையில் உன்னத இடம் காணவேண்டுமென உழைத்தவர். அவருடைய நாடகச் சிந்தனைகள் இன்று மாபெரும் இலக்கிய மாகத் திகழ்கின்றன. பெருமதிப்புக்குரிய அவ்வை சண்முகம் அவர்களின் நாடகச் சிந்தனைகளைத் தமிழ் கூறும் நல்லுலகிற்குப் புத்தகமாக வழங்குவதைப் பெருமையாகக் கருதுகிறேன்.

அவ்வை சண்முகம் அவர்களின் நாடகச் சிந்தனைகளைப் புத்தகமாகத் தொகுத்துத் தந்த கவிஞர் புத்தனேரி சுப்பிரமணியம் அவர்களுக்கும், நாடகக் கருவூலச் சிந்தனைகளின் தொகுப்பு நூலை வானதியில் புத்தகமாக வெளியிட அனுமதியளித்த அவ்வை சண்முகம் அவர்களின் அருமைப் புதல்வர் திரு. கலைவாணன் அவர்களுக்கும், கலைமணம் கமழும் அவ்வைக் குடும்பத்தினருக்கும் நன்றி.

இந்நூல் நாடக உலகின் வழிகாட்டி; நாடக உலகச் சிந்தனைக் களஞ்சியம்; இதனை வரவேற்று ஆதரவு நல்க வேண்டுகிறேன்.

அன்புள்ள

ஏ. திருநாவுக்கரசு வானதி பதிப்பகம்