பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மனிதருக்குள் ஏற்றத்தாழ்வை உருவாக்கிய சாதி அமைப்பு முறையை எதிர்த்தும் மக்கள் எல்லாரும் ‘ஒரே குலம்’ என்ற கருத்தை வலியுறுத்தியும், சாதிச் சண்டைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கவும் பம்மல் சம்பந்தனார் ‘பிராமணனும் சூத்திரனும்’ என்ற நாடகத்தை அந்நாளிலேயே எழுதியுள்ளார் என்பது மிகவும் குறிப்பிடத்தக்கது.

வெள்ளைச் சுவரில் கருப்புப் புள்ளி இருந்தால் பார்ப்பவர்களின் கண்களுக்கு உடனடியாகப் புலப்படுவதுபோல, நாடக அரங்கேற்றத்தின்போது சிறு தவறுகூடப் பார்வையாளர்களுக்குப் பெரிதாகத் தெரியும். எனவே நாடக அரங்கேற்றத்தில் சிறு தவறுகூட நிகழாமல் விழிப்புடன் பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

பம்மல் சம்பந்தனார் 1891இல் ‘சுகுண விலாச சபா’ என்ற நாடகக் குழு தோற்றம் பெற்றது முதல் 1930ஆம் ஆண்டு வரை அவர் எழுதிய நாடக நூல்கள், அவரோடு நடித்த நடிகர்கள், நாடகத் துறை தொழில் நுட்பக் கலைஞர்கள், பிற நாடகக் குழுவில் பணியாற்றிய கலைஞர்கள், நாடகத் துறையில் ஈடுபாடு கொண்ட அறிஞர்கள் முதலியோரைப் பற்றி அறிந்து கொள்ள உதவும் இந்நூல், ஒரு குறிப்பிட்ட காலக்கட்டத்தின் நிகழ்ச்சிகளை வெளிப்படுத்தித் தொகுத்துத் தரும் நாடக வரலாறாக அமைகிறது. தமிழ் நாடக வளர்ச்சிக்குப் பாடுபடுபவர்களுக்கும், நாடக ஆய்வாளர்களுக்கும், நாடகக் கலைஞர்களுக்கும் இந்நூல் மிகவும் பயனுள்ளதாகும்.

இவ்வரிய நூலை மறுபதிப்புச் செய்து வெளியிடுவதற்கு நிதி உதவிய நடுவணரசு நிருவாகத்தில் இயங்கும் சங்கீத நாடக அகாதமிக்கும், இந்நூலை வெளியிடுவதில் தூண்டுகோலாக இருந்த சென்னைப் பல்கலைக் கழகத் தமிழ் இலக்கியத் துறை இணைப் பேராசிரியர் முனைவர் வீ. அரசு அவர்களுக்கும், பம்மல் சம்பந்தனாரின் நூல்களை அச்சிட்டு வெளியிடுவதற்கு உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்திற்கு உரிமை தந்த பம்மல் சம்பந்தனாரின் குடும்பத்தார்க்கும் நன்றி.

நிறுவன வளர்ச்சிக்கு ஆக்கமும் ஊக்கமும் காட்டி வருகின்ற நிறுவனத் தலைவர் மாண்புமிகு தமிழ் ஆட்சி மொழி - பண்பாடு மற்றும் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் முனைவர் மு. தமிழ்க்குடிமகன் அவர்களுக்கும், தமிழ் வளர்ச்சி-பண்பாடு மற்றும் அறநிலையத் துறைச் செயலாளர் திருமிகு. த. இரா. சீனிவாசன் இ.ஆ.ப. அவர்களுக்கும் நன்றி.

மெய்ப்புத் திருத்திய பாரதி அச்சக உரிமையாளர் திரு. தி. நடராசன் அவர்களுக்கும் நன்றி.

இந்நூலினை ஒளிக்கோர்வை செய்து தந்த விக்னேஷ் பிரிண்டர்ஸ் உரிமையாளர்க்கும், கவினுற நூலாக்கம் செய்து தந்த ‘பார்க்கர் கம்ப்யூட்டர்’ உரிமையாளர்க்கும் நன்றி.

இயக்குநர்