இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
குருவியும் சிங்கமும் மரங்கள் நெருக்கமாக வளர்ந்திருந்த ஒரு காடு. அதிலே ஒரு மரத்தில் அழகான சிறிய குருவி ஒன்று கூடுகட்டி இரண்டு குஞ்சுகள் பொரித்திருந்தது. குருவிக்குத் தன் குஞ்சுகளைப் பார்த்து ஒரே மகிழ்ச்சி. குஞ்சுகளுக்கு இரை தேடிக் கொண்டுவந்து அது கொடுக்கும். குஞ்சுகளைப் பகலிலே குறித்த வேளையில் உறங்க வைக்கும்; இவ்வாறு அன்போடு அவற்றை வளர்த்துவந்தது.